முகப்பு
இந்தியா

ஒடிசா: மழை, ஆலங்கட்டி மழைக்கு 2 பேர் பலி, 600 வீடுகள் சேதம்

ஒடிசாவில் மழை, ஆலங்கட்டி மழைக்கு 2 பேர் பலியானதோடு 67 பேர் காயமடைந்தனர்.

Updated On : 22 மார்ச் 2025, 9:43 pm IST
ஆலங்கட்டி மழை(கோப்புப்படம்)
பகிர்:

ஒடிசாவில் மழை, ஆலங்கட்டி மழைக்கு 2 பேர் பலியானதோடு 67 பேர் காயமடைந்தனர்.

ஒடிசா மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. மழையோடு ஆலங்கட்டி மழையும் பெய்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். சனிக்கிழமை கஞ்சம் மற்றும் பூரி மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் இரண்டு பேர் பலியாகினர். மயூர்பஞ்ச் மாவட்டத்தில் பெய்த ஆலங்கட்டி மழையால் 67 பேர் காயமடைந்தனர்.

அவர்களில் ஏழு பேர் படுகாயமடைந்து மயூர்பஞ்ச் மாவட்ட தலைமையக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆலங்கட்டி மழையால் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் சுமார் 600 வீடுகளும் சேதமடைந்தன. மயூர்பஞ்ச் தவிர, கியோஞ்சர், நபரங்பூர் மற்றும் நுவாபாடா மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழைக்கு வீடுகள் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

மணிப்பூரில் இருந்து மியான்மர் நாட்டினர் 27 பேர் நாடு கடத்தல்

கஞ்சம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இடி மின்னலுடன் கூடிய மழை மாவட்டத்தின் பல பகுதிகளில் பெய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவகாலமற்ற மழையால் பெர்ஹாம்பூர் நகரத்தின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பெர்ஹாம்பூரில் உள்ள எம்.கே.சி.ஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மழைநீர் புகுந்ததால், நோயாளிகள் சிரமப்பட்டனர்.

இதனிடையே பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 36 மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. அடுத்த மூன்று நாள்களுக்கு ஒடிசாவின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.