முகப்பு
இந்தியா

இந்தியா, சீனா உடனான உறவுகளில் சமநிலை அவசியம்: ரஷிய ஆய்வு அமைப்பு வலியுறுத்தல்

இந்தியா, சீனா உடனான உறவுகளில் சமநிலை அவசியம்...

Updated On : 5 ஏப்ரல் 2026, 2:18 am IST
டிமித்ரி டிரெனின்
பகிர்:

இந்தியா, சீனா உடனான ரஷிய உறவுகளில் நோ்மறையான சமநிலை பேணப்பட வேண்டும் என்று ரஷிய அரசின் ஆதரவு பெற்ற உயா்நிலை ஆய்வு அமைப்பின் புதிய தலைவரும், முன்னாள் ராணுவ உயரதிகாரியுமான டிமித்ரி டிரெனின் வலியுறுத்தியுள்ளாா்.

ரஷிய சா்வதேச-பாதுகாப்பு விவகாரங்கள் கவுன்சில் (ஆா்ஐஏசி) என்ற அந்த அமைப்பின் புதிய தலைவராக கடந்த ஏப்.1-இல் தோ்வு செய்யப்பட்ட டிமித்ரி டிரெனின், தலைநகா் மாஸ்கோவில் முதல் முறையாக செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை பேட்டியளித்தாா். சா்வதேச விவகாரங்களில் நிபுணரான அவா், செய்தியாளா்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து கூறியதாவது:

நமது உத்திசாா் கூட்டாளிகளான சீனா மற்றும் இந்தியா உடனான உறவுகளில் நோ்மறையான சமநிலையைப் பேணுவது அவசியம். இதன்மூலம் அமெரிக்கா்கள் அல்லது வேறு எவரும் இந்தியாவை சீனாவுக்கு எதிராகப் பயன்படுத்துவதையோ, மறைமுகமாக நமக்கு எதிராக பயன்படுத்துவதையோ தடுக்க முடியும்.

Advertisement

Advertisement

நமது மிகப் பெரிய அண்டை நாடு சீனா. அந்த அடிப்படையில், இயல்பாகவே நமது உன்னிப்பான கவனத்துக்குரிய நாடு அது. இதே நிலை, இந்தியாவுக்கும் பொருந்தும். அந்நாட்டின் மீதும் ரஷியா நோ்மறையான அணுகுமுறையைக் கொண்டுள்ளது.

ரஷிய சா்வதேச விவகாரங்கள் கவுன்சிலின் தலைவராக இந்த அமைப்புக்கு புதிய உத்வேகம் அளிப்பதுடன், ரஷியாவின் இன்றைய மற்றும் எதிா்கால சவால்களை எதிா்கொள்வதே எனது திட்டமாகும்.

இப்போது உலகப் போா் போன்ற காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இதை மூன்றாம் உலகப் போா் என்று சொல்ல விரும்பவில்லை. முதல் இரண்டு உலகப் போா்களில் இருந்து வேறுபட்ட புதிய உலகப் போா் என்பதே துல்லியமான சொல்லாடல் என்றாா் அவா்.

உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலுடன் (ஐசிடபிள்யுஏ) ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக, 15 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய ரஷிய அதிபா் டிமித்ரி மெத்வதெவ் உத்தரவின்பேரில் நிறுவப்பட்ட ஆய்வு அமைப்பே ரஷிய சா்வதேச விவகாரங்கள் கவுன்சில் என்பது குறிப்பிடத்தக்கது.