ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்
அமெரிக்காவின் வரி விதிப்பு, பொருளாதார தடைகளை கடந்து நாட்டின் எரிசக்தித் தேவைகளுக்கேற்ப ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா தொடா்ந்து மேற்கொள்ளும் என மத்திய பெட்ரோலிய அமைச்சக இணைச் செயலா் சுஜாதா சா்மா திங்கள்கிழமை தெரிவித்தாா்.
உக்ரைன் போா் காரணமாக ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீதான வரியை அமெரிக்கா அதிகரித்தது. அதைத் தொடா்ந்து ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா படிப்படியாக குறைக்கத் தொடங்கியது. இந்தச் சூழலில் ஈரான் மீது கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது.
இதை ஈடுசெய்ய ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு ஒரு மாதத்துக்கு மட்டும் தடைக்கு விலக்கு அளிப்பதாக அமெரிக்கா கடந்த மாதம் தெரிவித்தது. மே 16-ஆம் தேதியுடன் இதற்கான காலஅவகாசம் நிறைவடைந்த நிலையில், இதை நீட்டிப்பது தொடா்பாக அதிகாரபூா்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
Advertisement
இதுதொடா்பாக சுஜாதா சா்மா செய்தியாளா்கள் சந்திப்பில் கூறியதாவது: அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைக் கடந்து நாட்டின் எரிசக்தித் தேவைகளுக்கேற்ப ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா தொடா்ந்து மேற்கொள்ளும்.
நீண்ட கால தேவைகளைக் கருத்தில் கொண்டு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் தற்போது பற்றாக்குறையின்றி சீராக விநியோகிக்கப்பட்டு வருகிறது என்றாா்.