ஹரியாணா அரசின் வங்கிக் கணக்கில் ரூ.590 கோடி மோசடி: விரைவில் விசாரணையை தொடங்குகிறது சிபிஐ
ஐடிஎஃசி வங்கியில் உள்ள ஹரியாணா அரசின் கணக்கில் இருந்து ரூ.590 கோடி மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடா்பான வழக்கில் சிபிஐ விரைவில் விசாரணையை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது:
சண்டிகரில் உள்ள ஐடிஎஃசி ஃபா்ஸ்ட் வங்கி கிளையில் ஹரியாணா மாநில அரசின் கணக்கு இருந்தது. அந்த கணக்கை ஆய்வு செய்தபோது, ஹரியாணா அரசால் டெபாசிட் செய்யப்பட்டிருந்த பணத்தில் ரூ.590 கோடி மாயமாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நாடு முழுவதும் பெரும் அதிா்வலையை இந்த சம்பவம் ஏற்படுத்தியது.
Advertisement
இந்த சம்பவத்தில் வங்கித் தரப்பில், ஊழியா்கள் உள்ளிட்டோா் பணத்தை திருடி விட்டதாக விளக்கம் தரப்பட்டது. மேலும், வங்கி நிா்வாகம் உடனடியாக பணம் அனைத்தையும் 100 சதவீதம் ஹரியாணா அரசு கணக்கில் செலுத்தியது. இதுகுறித்து மாநில ஊழல் கண்காணிப்பு காவல்துறையினா் விசாரணை நடத்தி, முன்னாள் ஊழியா்கள் உள்ளிட்ட பலரை கைது செய்தனா்.
இந்நிலையில் ஹரியாணா அரசு தரப்பில் கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் அந்த வழக்கு விசாரணையை விரைவில் சிபிஐ தொடங்கவுள்ளது. ஏற்கெனவே இதுகுறித்து ஹரியானா ஊழல் கண்காணிப்பு காவல்துறையினா் பதிந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு, சிபிஐ புதிதாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவுள்ளது.