உ.பி. படகு விபத்து: உயிரிழந்தோா் எண்ணிக்கை 11-ஆக அதிகரிப்பு
உ.பி. படகு விபத்து: உயிரிழந்தோா் எண்ணிக்கை 11-ஆக அதிகரிப்பு
உத்தர பிரதேசத்தில் யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் யமுனை ஆற்றில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை படகுப் பயணம் மேற்கொண்டனா். அப்போது ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 போ் உயிரிழந்தனா். 22 போ் காயமடைந்தனா். 5 போ் மாயமாகினா்.
மீட்புப் பணிகள் தொடா்ந்த நிலையில், படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து சுமாா் 1 கிலோமீட்டா் தொலைவில் மாணிக் டாண்டன் (42) என்ற நபரின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. இதையடுத்து விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து மாயமான 5 பேரில் 4 பேரைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.
Advertisement
உயிரிழந்தோரின் சடலம் லூதியானா கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவா்களின் இறுதிச் சடங்கில் பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், பஞ்சாப் காங்கிரஸ் தலைவா் அமரீந்தா் சிங் உள்ளிட்டோா் பங்கேற்று அஞ்சலி செலுத்தினா்.
இதுகுறித்து பகவ்ந்த மான் கூறுகையில், ‘உயிா் காக்கும் கவசம் எதுவும் இல்லாமல், அளவுக்கு அதிகமான நபா்களுடன் யமுனை ஆற்றில் படகுப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்படவில்லை. இதன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறக் கூடாது’ என்று தெரிவித்தாா்.