15 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தை சீரழித்தவர் மமதா : பிரதமர் மோடி
கடந்த 15 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தை திரிணமூல் காங்கிரஸ் கட்சி சீரழித்ததாக பிரதமர் விமர்சித்துள்ளது குறித்து...
கடந்த 15 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தை திரிணமூல் காங்கிரஸ் கட்சி சீரழித்ததாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 12) விமர்சித்தார்.
15 ஆண்டுகளுக்கு முன்பு மமதா பானர்ஜி ஆட்சி பொறுப்பேற்கும்போது சிறுவர்களாக இருந்தவர்கள், வாக்குரிமை பெற்ற இளைஞர்களாக மாறி, இம்முறை மாற்றத்தைக் கொண்டுவர நினைப்பதாகவும் கூறினார்.
மேற்கு வங்கத்தில் இளைஞர்களின் ஆதரவு இருப்பதால், இம்முறை பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கும் எனவும் உறுதிபடக் கூறினார்.
Advertisement
Advertisement
மேற்கு வங்கத்திற்கு ஏப். 23 மற்றும் 29 என இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
அந்தவகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து சிலிகுரியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 12) தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பிரசாரத்தின்போது பிரதமர் மோடி பேசியதாவது:
''திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த 15 ஆண்டுகளாக மாநிலத்தின் அழிவைத் தவிர வேறு எதையாவது நீங்கள் பார்த்ததுண்டா?
இங்கு அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் இருக்கிறார்கள். என் இளம் நண்பர்களே, 15 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் ஆரம்பப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்திருப்பீர்கள். இந்த தேர்தலில் நீங்கள் வாக்களிக்கப்போகிறீர்கள். உங்கள் வாக்குகள் மேற்கு வங்கத்தின் எதிர்காலத்தை மாற்றி அமைப்பதாக இருக்க வேண்டும்.
ஒரு அரசாங்கத்தை மதிப்பீடு செய்வதற்கு இது சரியான நேரம். திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆக்கப்பூர்வமான எதையும் மாநிலத்தின் நலனுக்காகச் செய்யவில்லை. அது தவறான பாதையில் மட்டுமே மாநிலத்தை வழிநடத்தி எடுத்துச்சென்றது.
பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிரானது திரிணமூல் காங்கிரஸ். பழங்குடிகளுக்கும் எதிரானது. அதனால்தான் இந்த முறை, 'மாற்றம்' என்ற மந்திரம் மேற்கு வங்கத்தின் மூலைமுடுக்கெங்கும் ஒலிக்கிறது.
திரிணமூல் அரசால் கடந்த 15 ஆண்டுகளுக்கான கணக்கை வழங்க இயலவில்லை. ஏனென்றால், அது தீய செயல்களை மட்டுமே செய்தது. மாநில வளர்ச்சிக்கு எந்தவொரு ஆக்கப்பூர்வமான செயல்களையும் செய்யவில்லை'' என பிரதமர் விமர்சித்தார்.