15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
மேற்கு வங்கத்துக்கு கடந்த 15 ஆண்டுகளாக திரிணமூல் காங்கிரஸ் துரோகம் மட்டுமே இழைப்பதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு
மேற்கு வங்கத்துக்கு கடந்த 15 ஆண்டுகளாக திரிணமூல் காங்கிரஸ் துரோகம் மட்டுமே இழைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தின் மதுராபூரில் பாஜக பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசுகையில், "மேற்கு வங்கத்தில் மாற்றத்தின் அலை வீசுகிறது. மே 4-ல் ஒரு மாற்றம் நிகழும் என நீங்கள் முடிவு செய்துள்ளீர்கள். அன்றைய நாளில், திரிணமூல் காங்கிரஸ் தோற்கடிக்கப்படும், பாஜகவின் நம்பிக்கை மேலோங்கும்.
இன்னும் 10 நாள்களில் வாக்குகள் எண்ணப்படும்போது, எல்லா இடங்களிலும் தாமரை மலரும் என நம்புகிறேன். தற்போதைய அரசை வேரோடு பிடுங்குவதற்கான நேரம்தான் இது என மேற்கு வங்க மக்களை, குறிப்பாக முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
Advertisement
தற்போதைய அரசின்கீழ், பெண்கள்தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆர்ஜி கர், சந்தேஷ்காலி போன்ற சம்பவங்கள் மட்டுமின்றி, குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பும் நம் தாய்மார்களையும் சகோதரிகளையும் மிகவும் காயப்படுத்தியுள்ளன. மாநிலத்தின் ஒவ்வொரு மகளும், அவர்கள் எதிர்கொண்ட அநீதிகளை மறக்க மாட்டார்கள்.
2029 மக்களவைத் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்க பாஜக அரசு நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தது. ஆனால், திரிணமூல் காங்கிரஸ் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. மாநிலத்தின் பெண்களின் உரிமைகளை திரிணமூல் காங்கிரஸ் பறித்துள்ளது.
துர்கா தேவியை வழிபடும் பூமியாக மேற்கு வங்கம் இருந்தபோதிலும், இங்கு பெண்களுக்கு அநியாமும், கொடுமைகளும் நடந்துள்ளன. உங்கள் வாக்குகள்தான் இதற்கு பொறுப்புக் கூறலை ஏற்கும்.
கடந்த 11 ஆண்டுகளில் ஒவ்வொரு கிராமத்துக்கும் மத்தியில் ஆளும் பாஜக அரசு மின்சாரம் வழங்கியுள்ளோம். பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின்கீழ் 4 கோடி ஏழைகளுக்கு வீடுகள் கட்டியுள்ளோம். கோடிக்கானவர்களுக்கு ஆயுஷ்மான் அட்டைகள் மூலம் இலவச சிகிச்சை உறுதி செய்துள்ளோம். 25 கோடி மக்களை வறுமையிலிருந்து வெளியே வர உதவியுள்ளோம்.
15 ஆண்டுகளில் திரிணமூல் காங்கிரஸ், மேற்கு வங்கத்துக்கு என்ன கொடுத்தது? பொய்யான வாக்குறுதிகளும் துரோகமும்தான்.
வெள்ளத்தைச் சமாளிப்பதாக திரிணமூல் காங்கிரஸ் உறுதியளித்தனர். ஆனால், மக்களுக்கு என்ன கிடைத்தது? துரோகம்தான்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாபெரும் உணவுப் பூங்காவை அறிவித்தனர். என்ன நடந்தது? துரோகம்தான்.
2,000 பெரிய தொழிற்சாலைகள் அமைப்பதாகக் கூறினர். அதன் விளைவுதான் என்ன? துரோகம்.
அவர்களின் வாக்குறுதி மீறல்களால் அதிகளவில் பாதிக்கப்பட்டோர் மதுராபூர் மக்கள்தான்.
ஒவ்வோர் ஆண்டும் கங்காசாகருக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்தாலும், இன்னமும் படகுகளை நம்பித்தான் இருக்க வேண்டியுள்ளது. நிரந்தர பாலம் இல்லை.
ஒவ்வொரு தேர்தலும் வாக்குறுதிகளைக் கொண்டு வருகிறது. ஆனால், தேர்தலுக்குப் பிறகு அவை மறைந்து விடுகின்றன" என்று தெரிவித்தார்.