பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
மகளிர் இடஒதுக்கீட்டுக்கு எதிராக திரிணமூல் - காங்கிரஸ் கட்சிகள் சதி செய்ததாக பிரதமர் மோடி பேசியது குறித்து...
பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை சதி செய்து தடுத்த திரிணமூல் காங்கிரஸுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் மேற்கு வங்க மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 19) தெரிவித்தார்.
மேலும், மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1.5 லட்சம் பெண்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.
மேற்கு வங்க மாநிலம் பங்குரா மாவட்டத்திற்குட்பட்ட விஷ்ணுபூர் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 19) பிரசாரம் மேற்கொண்டார்.
Advertisement
Advertisement
பிரசாரத்தில் திரிணமூல் காங்கிரஸை விமர்சித்து பிரதமர் மோடி பேசியதாவது:
’''திரிணமூல் காங்கிரஸ் பெண்களுக்கு அதிகாரமளித்தலையும் இட ஒதுக்கீட்டையும் விரும்பவில்லை. மேற்கு வங்க பெண்கள் மமதாவின் மகா காட்டு ராஜ்ஜியத்திற்கு சவால் விடுவதால், அம்மாநிலப் பெண்கள் அதிக எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவோ சட்டப்பேரவை உறுப்பினர்களாகவோ மாறுவதை திரிணமூல் விரும்பவில்லை.
அதனால், அவர்கள் காங்கிரஸுடன் சதி செய்து, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை எதிர்த்தனர். இந்தத் தேர்தலில் மேற்கு வங்கப் பெண்கள் திரிணமூல் காங்கிரஸை தண்டிப்பார்கள்.
பாஜகவின் அடையாளம் என்பது பெண்களின் அதிகாரம் மற்றும் பாதுகாப்போடு பின்னிப் பிணைந்துள்ளது. வளர்ந்த இந்தியாவை கட்டமைப்பதில் மகளிரின் பங்கு அதிகரிக்க வேண்டும் என்றும், அதிகமான பெண்கள் அரசியலில் அடியெடுத்து வைக்க வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம்.
ஆனால், நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் ஒருமுறை மேற்கு வங்கத்தின் சகோதரிகளுக்கு துரோகமிழைத்துள்ளது'' எனக் குறிப்பிட்டார்.