பிகார் புதிய அமைச்சரவையில் யார் யாருக்கு எந்தெந்த துறைகள்?
பிகார் அமைச்சரவையில் யார் யாருக்கு எந்தெந்த துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து...
பிகார் அமைச்சரவையில் புதிதாகப் பொறுப்பேற்ற முதல்வர் மற்றும் துணை முதல்வர்களுக்கு அவர்கள் கண்காணிப்பில் இயங்கக்கூடிய துறைகள் இன்று (ஏப்.15) ஒதுக்கப்பட்டுள்ளன.
பிகாரில் செவ்வாய்க்கிழமை (ஏப்.14) மாலை சட்டப்பேரவை கலைக்கப்படுவதாக அறிவித்த மாநிலங்களவை எம்.பி.யும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமார், தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார்.
இதனையடுத்து, பிகாரின் துணை முதல்வராக இருந்த சாம்ராட் செளதரி முதல்வராக தேர்வு செய்யப்பட்டு புதன்கிழமை (ஏப்.15) பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் சையத் அதா ஹஸ்னைன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
Advertisement
அதேபோல, துணை முதல்வர்களாக விஜய் குமார் சௌதரி மற்றும் பிஜேந்திர பிரசாத் இருவரும் பதவியேற்றனர். இந்த நிலையில், இவர்கள் மூவர்களுள் யார் யாருக்கு எந்தெந்த துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகியுள்ளது.
பிகார் அமைச்சரவை ஒதுக்கீட்டில், முதல்வர் சாம்ராட் சௌதரி 29 துறைகளைத் தக்கவைத்துக் கொள்கிறார். அதில் உள்துறை, வேளாண்மை, சுகாதாரம், சுற்றுலா, கலை மற்றும் கலாசாரம், விளையாட்டு உள்ளிட்டவை முக்கிய துறைகளாக உள்ளன.
துணை முதல்வர் விஜய் குமார் சௌதரிக்கு நீர்வளம், சிறுபான்மையினர் நலன், கல்வி, உயர்கல்வி, போக்குவரத்து மற்றும் ஊரக வளர்ச்சி உள்ளிட்ட 10 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
துணை முதல்வர் பிஜேந்திர பிரசாத் யாதவுக்கு எரிசக்தி மற்றும் நிதி உள்ளிட்ட 8 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.