எரிபொருள் தட்டுப்பாடு: தலைமைச் செயலகத்துக்கு நடந்தே சென்ற பிகார் முதல்வர்!
அரசு இல்லத்திலிருந்து தலைமைச் செயலகம் வரை பிகார் முதல்வர் நடந்து சென்றது குறித்து...
அரசு இல்லத்திலிருந்து தலைமைச்செயலகத்துக்கு பிகார் முதல்வர் சாம்ராட் சௌதரி வெள்ளிக்கிழமை நடந்தே சென்றுள்ளார்.
மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போா்ச்சூழலால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளது. இதனால், அவற்றின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதிக விலை கொடுத்து அவற்றை வாங்கும்போது, இந்தியாவின் அந்நிய செலாவணி குறையும் நிலையில், எரிபொருள்களை மக்கள் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
Advertisement
ஆகையால், பல்வேறு முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய வாகன அணிவகுப்பைப் பாதியாகக் குறைத்தும் மின்சார வாகனங்களில் பயணித்தும் பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்த வரிசையில், பிகார் முதல்வர் சாம்ராட் சௌதரி அதிகாரிகளுடன் தனது அரசு இல்லத்திலிருந்து தலைமைச் செயலகத்துக்கு, சுமார் 500 மீட்டர் வரை நடந்தே சென்றார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சாம்ராட் சௌதரி, எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்காக வீட்டிலிருந்தே வேலை செய்வது, வாகனமில்லா தினத்தைக் கடைபிடிப்பது, அரசு அதிகாரிகள் சார்ந்த அனைத்து சந்திப்புகளையும் இணைய வழியில் நடத்துவது போன்ற முக்கிய நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.