பிகார்: இடிந்து விழுந்த 10 ஆண்டுகள் பழமையான பாலத்தின் தூண்கள்!
பிகாரில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் பல தூண்கள் இடிந்து விழுந்ததாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
பிகாரில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் பல தூண்கள் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலம், நாலந்தா மாவட்டத்தில் உள்ள தரியாப்பூர் என்ற இடத்தில் சக்ரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் பல தூண்கள் இடிந்து விழுந்ததாக வெள்ளிக்கிழமை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த திங்கட்கிழமை இந்த பாலத்தின் பல தூண்கள் சரிந்து விழுந்துள்ளன என்று உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
பிகார்ஷெரீப் துணை கோட்ட அதிகாரி கிரிஸ்லே ஸ்ரீவஸ்தவா கூறுகையில், "ஆய்வுக் குழுவின் முந்தைய அறிக்கையைப் பெற்ற பிறகு, பாதுகாப்பு காரணங்களுக்காக பாலத்தில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது" என்றார். மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுப்பதற்காக அந்த இடத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
"போக்குவரத்தை மீண்டும் தொடங்கும் வகையில், அடுத்த ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் ஆற்றின் வழியாக தற்காலிக மாற்றுப் பாதை அமைக்கப்படும்" என்று அந்த அதிகாரி மேலும் கூறினார். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பாலம், நாலந்தா மாவட்டத்தின் கிழக்குப் பகுதியையும், ஷேக்ஸ்புரா மாவட்டத்தின் மேற்குப் பகுதியையும் இணைக்கிறது.
பிகாரில் 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு மாவட்டங்களில் பெரிய மற்றும் சிறிய பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்த நிகழ்வுகள் சர்ச்சையை கிளப்பியது.