தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை
மக்களவை-பேரவைகளில் 33% மகளிா் இடஒதுக்கீடு: உடனடியாக அமல்படுத்த அரசுக்கு முன்னாள் முதல்வர் கோரிக்கை
மும்பை : தொகுதி மறுவரையறை மசோதாவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க முன்னாள் முதல்வர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வலியுறுத்தியுள்ளார்.
மக்களவை-பேரவைகளில் 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை 2029-ஆம் ஆண்டுமுதல் அமலாக்கவும், அதற்கு ஏதுவாக மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 850 வரை அதிகரிக்கவும் வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா உள்பட மூன்று மசோதாக்கள் மக்களவையில் வியாழக்கிழமை (ஏப். 16) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை வரவேற்றும் தொகுதி மறுவரையறையை எதிர்த்தும் மகாராஷ்டிரத்தின் முன்னாள் முதல்வரும் சிவ சேனை (உத்தவ் தாக்கரே அணி) தலைவருமான உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார்.
Advertisement
இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது,
“மக்களவையிலும் மாநில சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் விதத்தில் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள 2023 சட்டத்தை உடனடியாக அமல்படுத்தவும்” என்று குறிப்பிட்டார். அதே வேளையில், இப்போதைக்கு தொகுதி மறுவரையறை நிறுத்தி வைக்கப்பட வேண்டும். ஏனெனில், அது தேச முக்கியத்துவம் வாய்ந்ததுடன் அது பற்றி கூடுதலாக விவாதமும் ஆலோசனைகளும் மேற்கொள்ள வேண்டிய தேவையிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.