ஒரு மணிநேரம் போதும்! சட்டத்திருத்தம் குறித்து அமித் ஷா
ஒவ்வொரு மாநிலத்திலும் 50% இடங்கள் அதிகரிக்கப்படும்: அமித் ஷா
புது தில்லி : ஒரு மணி நேரம் போதும் எனக்கு; மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கையை 50 சதவீதம் கூடுதலாக உயர்த்தும் சட்டத்திருத்தங்களைச் செய்துவிட்டு திரும்புகிறேன் என்று அமித் ஷா மக்களவையில் இன்று (ஏப். 17) பேசினார்.
இன்று (ஏப். 17) மக்களவையில் மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து அதிகபட்சமாக 850 வரை அதிகரிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா-2026, தொகுதி மறுசீரமைப்பு மசோதா-2026 (தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் அமைக்க வழிவகுக்கும் மசோதா), சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசங்களில் இந்தச் சட்டத் திருத்தங்களை நிறைவேற்ற வகை செய்யும் யூனியன் பிரதேசங்கள் சட்டத் திருத்த மசோதா-2026 ஆகிய மூன்று மசோதாக்கள் மீதான விவாதம் நடைபெற்றபோது பேசிய அமித் ஷா முக்கிய உத்தரவாதம் ஒன்றை எதிர்க்கட்சிகளுக்கு அளித்தார்.
அவர் பேசும்போது, “எனக்கு ஒரு மணி நேரம் தாருங்கள்... அவையில் மாநிலங்களுக்கான இடங்களை 50 சதவீதம் உயர்த்தும் திருத்தங்களுடன் திரும்புகிறேன். நாடாளுமன்றத்தின் பலம் அதிகரித்தால், கூட்டத்தொடர் நாள்களும் அதிகரிக்கும். ஒவ்வொரு மாநிலத்திலும் நாங்கள் 50 சதவீதம் இடங்களை அதிகரிக்கிறோம். சாதிவாரிக் கணக்கெடுப்பையும் நாங்கள் மேற்கொள்வோம்” என்றார்.
Advertisement
Advertisement
மேலும், தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் தமிழகம் உள்பட தென் மாநிலங்களுக்கு அநீதி ஏற்படாது என்று நான் எழுத்துபூர்வமாக உறுதியளிக்கத் தயார், மசோதாவை நிறைவேற்றித் தர நீங்கள் தயாரா என்று எதிர்க்கட்சியினருக்கு அமித் ஷா சவால் விடுத்தார்.
அதன் தொடர்ச்சியாக, நடைபெற்ற வாக்கெடுப்பில் இன்று (ஏப்.17) மாலை நடைபெற்றது. இதில், மொத்தமாக 489 மக்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்தச் சிறப்புக் கூட்டத்தொடரில் மொத்தமுள்ள 535 உறுப்பினர்களில் 528 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். மசோதாவிற்கு ஆதரவாக 298 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், 230 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு எதிராக வாக்களித்தனர்.
மத்திய பாஜக அரசு, மக்களவையில் தாக்கல் செய்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற மூன்றில் இரண்டு பங்கான 352 வாக்குகள் தேவை என்ற நிலையில், 298 வாக்குகள் மட்டுமே கிடைத்ததால், இந்த மசோதா தோல்வியடைந்தது.