தொகுதி மறுவரையறை ஏன் முக்கியம்: மக்களவையில் அமித் ஷா பதிலுரை
தொகுதி மறுவரையறை ஏன் முக்கியம் என்று மக்களவையில் அமித் ஷா பதிலுரையாற்றி வருகிறார்.
நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் மக்கள் தொகை வேறுபாடு அதிகமாக உள்ளதால் மறுவரையறை என்பது மிகவும் முக்கியம் என்று மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலுரை அளித்திருக்கிறார்.
மகளிர் இட ஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தின் நிறைவாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலுரை ஆற்றி வருகிறார்.
மக்களவையில் இன்று மாலை 6.30 மணியளவில் அமித் ஷா அளித்த பதிலுரையில், மகளிர் நலனுக்காகவே மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிப்பு நிறுத்தப்பட்டது. அதனால்தான், தற்போது மகளிர் இட ஒதுக்கீட்டை, மக்களவைத் தொகுதி மறுவரையறையுடன் இணைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
Advertisement
Advertisement
நாட்டில் உள்ள சில மக்களவைத் தொகுதிகளில் மக்கள் தொகை சில லட்சங்கள்தான் உள்ளன. ஆனால், வேறுசிலவற்றில் 45 லட்சங்கள் வரை மக்கள் தொகை உள்ளது. எனவே, தொகுதிகளில் மக்கள் தொகை வேறுபாடு அதிகமாக இருப்பதால்தான் மக்களவைத் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.
மகளிர் நலனுக்காகவே மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. பட்டியலின மக்களுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதையும் எதிர்க்கட்சிகள் தடுக்கின்றன. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தொகுதி மறுவரையை தடுத்தது. தற்போதும் அதையேதான் செய்கிறது. மறுவரையறை என்பது, ஒவ்வொரு மக்களவைத் தொகுதியின் மக்கள் தொகையையும் முறைப்படுத்தும்.
மக்கள்தொகை 140 கோடியை எட்டியபோதும்கூட, அதாவது கடந்த 50 ஆண்டுகளாக மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. நாட்டை தெற்கு - வடக்கு என்று பிரிப்பதை ஏற்க முடியாது. நமது நாட்டில் பிரிவினை அரசியல் எடுபடாது. மத்திய அரசு, மாநிலங்களுக்கு இடையே எந்த பாகுபாட்டையில் பார்க்கவில்லை.
வரும் 2029ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மகளிர் இட ஒதுக்கீட்டு முறையுடன் நடைபெறுவதை இந்த மூன்று சட்டத்திருத்த மசோதாக்களும் உறுதிசெய்யும் என்று அமித் ஷா கூறினார்.
Why is constituency redelineation important Amit Shah's reply in Lok Sabha
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.