ஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 10 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனை பற்றி...
கேரளத்தில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மீது 15 ஆண்டுகளுக்கு முன்னர் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 10 பேருக்கு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கேரளத்தின் கன்னூர் அருகே உள்ள திமிரி கிராமப் பகுதியில் 2011 ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று ஆர்.எஸ்.எஸ். - பாஜக உறுப்பினர்கள் 30 பேர் வந்த வாகனத்தின் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. இந்தத் தாக்குதலில் 9 பேர் படுகாயமடைந்தனர்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் புதிய கிளை ஒன்று அந்தப் பகுதியில் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் மோதல் காரணமாக இந்தத் தாக்குதல் நடைபெற்றது.
Advertisement
இதனைத் தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் கன்னூர் மாவட்ட நீதிமன்ற அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் வெடிபொருள் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ், 10 பேருக்கும் மாவட்ட நீதிமன்ற நீதிபதி பிரசாந்த் கே.என். தண்டனையை அறிவித்தார்.
வெடிகுண்டை வாகனத்தின்மீது வீசிய முக்கியக் குற்றவாளியான டி வி பினு என்பவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மீதமுள்ள 9 பேரான எம் கே பிரதீப் குமார், பி பி சத்யன், பி வி பாபுராஜ் ( சிபிஐ - எம்) பஞ்சாயத்து உறுப்பினர், ஈ வி வினோத் குமார், விஜயன், கே பி சுரேஷ், டோபி, ஜனார்த்தனன் கே வி மற்றும் சிவப்பிரகாஷ் ஆகியோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒவ்வொருவரும் தலா ரூ. 2.6 லட்சம் அபராதம் செலுத்தவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.