காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!
பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுடன் தொலைக்காட்சியில் உரையாற்றினார்.
மத்திய அரசு கொண்டு வந்த மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்களுக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 17) மாலை நாடாளுமன்ற மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
அதில், 298 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 230 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனால், இந்த மசோதா நிறைவேற்றம் மக்களவையில் தோல்வி அடைந்தது.
இந்த நிலையில், 33 சதவிகித மகளிர் இடஒதுக்கீட்டுக்கான தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்த நிலையில், இன்று (ஏப். 18) இரவு 8.30 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் தொலைக்காட்சியில் உரையாற்றினார்.
Advertisement
அதில், “இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் நமது பெண்களின் கனவுகள் எப்படி நசுக்கப்படுகின்றன என்பதை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான மசோதா தோல்வியடைந்ததற்கு நாட்டின் அனைத்துப் பெண்களிடமும் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இந்தியப் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் இந்தப் போராட்டம் எதிர்க்கட்சிகளின் சுயநல அரசியல் காரணமாக முடங்கியுள்ளது.
காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் நமது பெண்கள் சக்திக்கு எதிராக சுயநல அரசியல் செய்து அதனைக் கொண்டாடுவதை இந்தியப் பெண்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த எதிர்க் கட்சிகள் மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்த்து பாவம் செய்துள்ளனர். இதற்காக அவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள். மசோதாவை நிறைவேற்றவிடாமல் தோற்கடித்து அரசியலமைப்பை இவர்கள் அவமதித்துள்ளனர்.
யாரிடமிருந்தும் எதையும் பறிக்காமல், நமது பெண்களுக்கு ஊக்கமளிக்கும் நோக்கத்துடன் இடஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்பட்டது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைத் தோற்கடித்ததன் மூலம் காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி ஆகியோர் சிசுக்கொலை செய்துள்ளனர்.
காங்கிரஸ் தனது கடந்தகால தவறுகளைத் தற்போது திருத்திக்கொள்ளும் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் அவர்கள் புதிய வரலாறு படைப்பதற்கான வாய்ப்பைத் தவறவிட்டனர்.
பெண்களால் தங்களது சுயநல அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பதால் குடும்பங்களால் நடத்தப்படும் கட்சிகள் பெண்கள் முன்னேற்றம் அடைவதை விரும்பவில்லை.
காங்கிரஸ் எப்போதும் மக்களை பிளவுபடுத்தி அரசியல் செய்வதையே நம்புகின்றது. அதனால்தான், வடக்கு - தெற்கு பற்றி பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.
ஒரு பெண் எதை வேண்டுமானாலும் மறந்துவிடுவார். ஆனால், தான் அவமானப்பட்டதை மறக்கமாட்டார். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் செய்த இந்த அவமானம் ஒவ்வொரு பெண்ணின் இதயத்திலும் எப்போதும் இருக்கும்.
மகளிர் இடஒதுக்கீடு காலத்தின் தேவை. இது இந்தியாவின் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு என அனைத்துப் பகுதிகளிலும் சமமான மற்றும் சீரான அதிகாரப் பகிர்வை உறுதி செய்யும் நேர்மையான முயற்சியாக இருந்தது.
தேசத்தைக் கட்டியெழுப்பவும், முன்னேற்றவும் செய்யும் அனைத்து முயற்சிகளையும் காங்கிரஸ் எதிர்த்து வந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் முக்கிய சீர்திருத்தங்கள் மீது எப்போதும் பொய்யான தகவல்களைப் பரப்பி அவற்றைத் தாமதப்படுத்தி வந்துள்ளனர். காங்கிரஸ் சீர்திருத்தங்களுக்கு எதிரான கட்சி.
நம் நாடு தற்போது சந்தித்து வரும் ஒவ்வொரு சவால்களும் காங்கிரஸ் கட்சியின் ஆண்டாண்டு கால எதிர்மறை அணுகுமுறை காரணமாகவே ஏற்பட்டுள்ளது. அதன் எதிர்மறைத் தன்மை நாட்டிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு நமது நாட்டுப் பெண்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.
மசோதாவை நிறைவேற்ற தேவைப்பட்ட 66% வாக்குகள் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால், நமது பெண்களின் ஆசீர்வாதம் எனக்கு உண்டு என்பதும், நாங்கள் எங்கள் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் என்பதும் எனக்குத் தெரியும்:
எங்களுக்குத் தேவைப்பட்ட எண்ணிக்கை நேற்று கிடைக்காமல் இருக்கலாம். ஆனால், எங்களது போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கும்.
மகளிர் இடஒதுக்கீட்டிற்கு எதிரான அனைத்து தடைகளையும் அகற்றுவோம்” என பிரதமர் மோடி பேசியுள்ளார்.