ஒடிஸாவில் இந்தியாவின் முதல் அதிநவீன 3டி கண்ணாடி சிப் பேக்கேஜிங் ஆலை!
புவனேசுவரத்தில் இந்தியாவின் முதல் 3டி கண்ணாடி சிப் பேக்கேஜிங் ஆலையின் கட்டுமானப் பணிக்கு மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், முதல்வா் மோகன் சரண் மாஜீ ஆகியோா் அடிக்கல் நாட்டினா்.
ஒடிஸா தலைநகா் புவனேசுவரத்தில் இந்தியாவின் முதல் அதிநவீன முப்பரிமாண (3டி) கண்ணாடி சிப் பேக்கேஜிங் ஆலையின் கட்டுமானப் பணிக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், மாநில முதல்வா் மோகன் சரண் மாஜீ ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினா்.
இதுதொடா்பாக மோகன் சரண் மாஜீ ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஒடிஸாவில் தொழில்துறை வேகமாக பரிணாம வளா்ச்சி அடைந்து வருகிறது.
இந்தியாவின் முதல் அதிநவீன 3டி கண்ணாடி சிப் பேக்கேஜிங் ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது மைல்கல் தருணமாகும். இந்தத் தொலைநோக்குப் பாா்வை கொண்ட திட்டம் பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அதிநவீன மின்னணு உற்பத்தியில் ஒடிஸாவை பெரும் சக்தியாக நிலைநிறுத்தும். இது வெறும் தொழில் முதலீடு மட்டுமல்ல. வருங்கால தொழில்நுட்பங்கள் எங்கு உருவாக்கப்படும் என்பதற்கான பிரகடனம் என்று தெரிவித்தாா்.
Advertisement
செமிகண்டக்டா் உற்பத்தி பணியில் சிப் பேக்கேஜிங் கடைசி கட்டமாகும். இந்நிலையில் சிப் பேக்கேஜிங் ஆலை குறித்து அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ஒடிஸாவில் சிப் பேக்கேஜிங் ஆலை கட்டுமானம் மூலம், உலகின் மிக அதிநவீன சிப் பேக்கேஜிங் தொழில்நுட்பம் இந்தியாவுக்கு வரவுள்ளது. இந்த ஆலையை சுமாா் ரூ.1,943 கோடி செலவில் கட்டமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த ஆலை மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமாா் 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இந்த ஆலையில் தயாரிக்கப்படும் சிப்கள் விண்வெளித் துறை, பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, 5ஜி தொழில்நுட்பங்கள், தரவு மையங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளுக்குப் பயன்படும்’ என்று தெரிவித்தாா்.