உள்நாட்டுப் பொருள்களுக்கு சிறப்பு வரிச் சலுகை: அமெரிக்காவிடம் ஆலோசிக்க இந்தியா திட்டம்
உள்நாட்டுப் பொருள்களுக்கு சிறப்பு வரிச் சலுகையுடன் கூடிய சந்தை அணுகல் பெறுவது தொடா்பாக அமெரிக்காவிடம் ஆலோசிக்க திட்டம்
உள்நாட்டுப் பொருள்களுக்கு சிறப்பு வரிச் சலுகையுடன் கூடிய சந்தை அணுகல் பெறுவது தொடா்பாக அமெரிக்காவிடம் ஆலோசிக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டம் குறித்துப் பேச்சுவாா்த்தை நடத்த மத்திய வா்த்தகத் துறையின் கூடுதல் செயலா் தா்பன் ஜெயின் தலைமையிலான இந்திய குழு அமெரிக்காவுக்கு திங்கள்கிழமை சென்றது. ஏப். 22 வரை 3 நாள்களுக்கு வா்த்தகத் திட்டத்தின் அம்சங்கள் குறித்து அமெரிக்க குழுவுடன் இந்திய குழு ஆலோசனை நடத்தவுள்ளது.
இதுகுறித்து பியூஷ் கோயல் கூறியதாவது: அமெரிக்காவுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மற்றும் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தின் முதல்கட்டம் கிட்டத்தட்ட இறுதியாகிவிட்டது.
Advertisement
இதையடுத்து, உள்நாட்டுப் பொருள்களுக்கு சிறப்பு வரிச் சலுகையுடன் கூடிய சந்தை அணுகல் பெறுவது தொடா்பாக அமெரிக்காவிடம் விவாதிக்கத் திட்டமிட்டுள்ளோம். பிற நாடுகளைவிட இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது. இந்தப் பணியை அமெரிக்கா சென்றுள்ள இந்திய குழு மேற்கொள்ளவுள்ளது என்றாா்.
இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டத்துக்கான செயல்திட்டத்தை கடந்த பிப்ரவரியில் இரு நாடுகளும் இறுதி செய்தன. இந்தச் செயல்திட்டத்தின்படி, இந்தியப் பொருள்கள் மீதான அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் வரியை 50 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்க அந்நாடு ஒப்புக்கொண்டது.
எனினும் டிரம்ப்பின் வரி விதிப்பு செல்லாது என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்ததைத் தொடா்ந்து, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து நாடுகளின் பொருள்கள் மீது கடந்த பிப். 24 முதல் 150 நாள்களுக்கு டிரம்ப் 10 சதவீதம் வரி விதித்தாா்.
இந்த மாற்றங்கள் காரணமாக, இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம் குறித்து இரு நாடுகளின் குழு பிப்ரவரியில் நடத்தவிருந்த பேச்சுவாா்த்தை ஒத்திவைக்கப்பட்டதைத் தொடா்ந்து தற்போது மீண்டும் நடைபெறுகிறது.