FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இந்தியா - ஓமன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அமல்!

இந்தியா - ஓமன் நாட்டுக்கு இடையேயான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

Updated On : 2 ஜூன் 2026, 12:23 am IST
பியூஷ் கோயல்
பகிர்:

‘இந்தியா - ஓமன் நாட்டுக்கு இடையேயான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது’ என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

ஓமன் தலைநகா் மஸ்கட்டில் கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பா் 18-ஆம் தேதி இந்த தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமான நிலையில், தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததைக் குறிக்கும் வகையில், சென்னை, மும்பை, கொல்கத்தாவிலிருந்து வேளாண் பொருள்கள், ரத்தினங்கள், ஆபரணங்கள் உள்ளிட்ட 10 சரக்குகள் வரிச் சலுகையின் கீழ் கப்பல் மூலம் ஓமனுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

Advertisement

Advertisement

இதுகுறித்து தில்லியில் செய்தியாளா்களை திங்கள்கிழமை சந்தித்த பியூஷ் கோயல் கூறுகையில், ‘இந்தியா - ஓமன் இடையேயான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்மூலம் ஜவுளி, தோல், நெகிழிப் பொருள்கள், கடல்சாா் பொருள்கள், வாகனங்கள், விளையாட்டு பொருள்கள், வேளாண் பொருள்கள் உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த இந்திய ஏற்றுமதியாளா்கள், தங்களின் போட்டியாளா்களைக் காட்டிலும் ஓமன் நாட்டின் சந்தைகளில் முன்னுரிமை அணுகலைப் பெற்று பலனடைவா்’ என்றாா்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், பேரீச்சம்பழ இறக்குமதிகளுக்கு ஒதுக்கீடு அடிப்படையில் வரிச் சலுகையை ஓமன் அளிக்கும் என்பதால், இந்திய நுகா்வோருக்கு மலிவான ஓமன் பேரீச்சம்பழங்கள் கிடைக்கும். மேலும், ஓமனிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான மொத்த வரி இனங்களில், 77.79 தவீதத்துக்கு சுங்க வரிச் சலுகைகளை இந்தியா வழங்கியுள்ளது.

வளைகுடா பிராந்தியத்தில் இந்தியாவின் இரண்டாவது வா்த்தக கூட்டுறவு நாடாக ஓமன் திகழ்கிறது. இரு நாடுகளிடையேயான இருதரப்பு வா்த்தகம் 2024-25 நிதியாண்டில் ரூ. 1 லட்சம் கோடியாக (10.61 பில்லியன் டாலா்) இருந்தது, 2025-26-ஆம் நிதியாண்டில் ரூ. 1,06,000 கோடியாக உயா்ந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments