மசாலா பொரியும் மீனும் பாஜக - திரிணமூல் பிரசாரத்தின் அங்கம்: மமதா பானர்ஜி
பாஜக ஆட்சியமைத்தால் மேற்கு வங்கத்தில் மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளுக்கு தடை விதிக்கும் என மமதா எச்சரிக்கை...
மலாசா பொரியும் மீனும் மேற்கு வங்க கலாசாரத்தின் அங்கமாக மட்டுமின்றி, பாஜக - திரிணமூல் காங்கிரஸ் பிரசாரத்தின் ஒரு அங்கமாகவும் மாறியுள்ளதாக அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி இன்று (ஏப். 22) தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை (ஏப். 23) நடைபெறவுள்ளது.
இதனையொட்டி ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, ஜார்கிராம் பகுதியில் உள்ள சாலையோரக் கடையில் மசாலா பொரி வாங்கி அதனை உண்ட விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டது.
Advertisement
மேற்கு வங்கத்தின் பாரம்பரிய மாலை நேர சிற்றுணவுகளில் ஒன்றாக மசாலா பொரி உள்ளது. இதனை பிரதமர் மோடி உண்டதால், பாஜகவைச் சேர்ந்த பல வேட்பாளர்கள் தங்கள் பிரசாரங்களில் பலருக்கும் மசாலா பொரியை விநியோகித்தனர்.
இந்நிலையில், இதனை விமர்சித்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள தொகுதியில் மமதா பானர்ஜி பேசியதாவது:
மேற்கு வங்கத்தின் பிரதான சிற்றுணவான மசாலா பொரியை பிரதமர் மோடி உண்கிறார். மேற்கு வங்கத்தில் மீனும் பாரம்பரியம் மிக்க உணவுதான். அதனை மோடி உண்பாரா? அவர் இதற்கு சம்மதம் தெரிவித்தால், நானே என் கையால் மீன் சமைத்துத் தருகிறேன்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்கத்தில் மீன் உள்ளிட்ட இறைச்சிகளுக்கு தடை விதிக்கும். இறைச்சி, முட்டை, மீன் என எதையுமே சாப்பிட முடியாதபடி உத்தரவிடும். என்ன சாப்பிட வேண்டும் என்பதை பாஜகதான் தீர்மானிக்கும். அதோடுமட்டுமின்றி மோடி சாப்பிட்ட மசாலா பொரி அந்த கடைக்காரர் செய்தது கிடையாது. வெறும் பகட்டு நாடகத்திற்கு செய்த செயல் அது.
மேற்கு வங்கத்தின் பாரம்பரிய உணவுகளாக இருந்த மசாலா பொரியும் மீனும் தற்போது பாஜக - திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளின் பிரசாரத்தின் முக்கிய அங்கமாக மாறியுள்ளது என மமதா பேசினார்.