ராகுலுடன் சேர்ந்து கார்கேயின் மேன்மை கெடுகிறது : அமித் ஷா
பிரதமர் மோடியை பயங்கரவாதி என கார்கே பேசியது குறித்து அமித் ஷா கருத்து...
ராகுல் காந்தியுடன் சேர்ந்திருப்பதால் மல்லிகார்ஜுன கார்கேவின் மேன்மையும் கெடுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஏப். 22) விமர்சித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியை பயங்கரவாதி என மல்லிகார்ஜுன கார்கே பேசியதை சுட்டிக்காட்டி அமித் ஷா இவ்வாறு கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் பகுதியில் மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று (ஏப். 22) பிரசாரம் மேற்கொண்டார்.
Advertisement
பிரசாரத்தின்போது, கார்கேவையும் ராகுல் காந்தியையும் விமர்சித்து அமித் ஷா பேசியதாவது:
''நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை ஒழிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டுவரும் பிரதமர் நரேந்திர மோடியை பயங்கரவாதி என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குறிப்பிடுகிறார். ராகுல் காந்தியுடனான சேர்க்கையால் மல்லிகார்ஜுன கார்கேவின் மேன்மையும், பேச்சும் தரமிழந்துள்ளது.
நீங்கள் எவ்வளவு அவதூறு பேசுகிறீர்களோ, எவ்வளவு சேற்றை வாரி இறைக்கிறீர்களோ, அதையெல்லாம் விட பெரியதாக தாமரை மலர்ந்தே தீரும். நாங்கள் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம். இது முத்தலாக் முறையையும், நான்கு திருமணங்கள் செய்துகொள்வதையும் முடிவுக்கு கொண்டுவரும்'' என அமித் ஷா பேசினார்.