ரூ. 10 கோடி இணைய மோசடி: 15 நாள்களில் 38 பேர் கைது!
நாடு தழுவிய இணைய மோசடி வலையமைப்பு பற்றி..
நாடு தழுவிய இணைய மோசடி வலையமைப்பில் ஈடுபட்டிருந்த 38 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெருகிவரும் இணைய மோசடி வழக்குகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகக் கடந்த 15 நாள்களில் இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாகக் காவல் கண்காணிப்பாளர் மணீஷ் குமார் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது,
Advertisement
ஆபரேஷன் மியூல் ஹன்ட் நடவடிக்கையின் கீழ் கடந்த 15 நாள்களில் ரூ. 10 கோடி மதிப்பிலான இணைய மோசடிகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டுங்கர்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இதுவரை 38 குற்றவாளிகளை போலீஸார் கைது செய்துள்ளனர். நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட இணைய மோசடி வழக்குகளில் இந்தக் குற்றவாளிகள் ஈடுபட்டிருந்தனர். பொதுமக்களிடம் கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
குற்றவாளிகளுக்கு எதிராக இதுவரை 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட மோசடித் தொகை ரூ. 10 கோடியைத் தாண்டியுள்ளதாகவும், விசாரணை அதிகப்படுத்தும்போது இந்தத்தொகை மேலும் அதிகரிக்கக்கூடும் என அவர்கள் குறிப்பிட்டனர்.
முதலீடு, வர்த்தகம் மற்றும் எஸ்கார்ட் சேவை திட்டங்கள் வாயிலாகப் பாதிக்கப்பட்டவர்களை ஆசை காட்டி ஏமாற்றியுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், துபை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் செயல்பட்டு வந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
இந்த நடவடிக்கையின்போது, குற்றவாளிகளிடமிருந்து 73 மொபைல் போன்கள், 136 சிம் கார்டுகள், ஒரு சொகுசு ஜீப் மற்றும் பல்வேறு மின்னணு சாதனங்களை காவல்துறையினர் கைப்பற்றினர்.
இந்த மோசடி வலையமைப்பை விசாரிக்கப் பல தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், குற்றவாளிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் வங்கிக் கணக்குகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வங்கிக் கணக்கு விவரங்கள், ஆதார், பான், ஏடிஎம் விவரங்கள் போன்ற முக்கியமான தகவல்களைத் தொலைபேசி அழைப்புகள் மூலமாகவோ அல்லது தொலைபேசி செயலிகள் வாயிலாகவோ யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மோசடியான சலுகைகளுக்குப் பலியாகாமல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
இதுதொடர்பாக, கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.