பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல்
பஹல்காம் தாக்குதல் நினைவு நாளில் ராகுல் தெரிவித்துள்ளதைப் பற்றி...
பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டோரின் தியாகம் நாட்டின் ஆன்மாவில் அழியாமல் பதிந்திருக்கும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பலியானோரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
Advertisement
”கடந்தாண்டு பஹல்காமில் நடைபெற்ற கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த அனைத்துத் துணிச்சலான வீரர்களுக்கும் எனது உளமார்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறேன்.
அவர்களின் தியாகத்தையும், அவர்களின் குடும்பத்தினர் அனுபவிக்கும் துயரத்தையும் இந்தியா ஒருபோதும் மறக்காது. அதேபோல், இந்த இழிவான செயலுக்குப் பொறுப்பானவர்களை ஒருபோதும் மன்னிக்காது.
அப்பாவி மக்கள் கொடூரமாக கொல்லப்பட்ட நினைவுகள், இன்றும் எங்கள் இதயங்களை உலுக்குகிறது. அந்த தியாகிகள் குடும்பத்தினரின் துயரம், நம் அனைவரின் துயரமாகும். அவர்களின் தியாகம் நாட்டின் ஆன்மாவில் என்றென்றும் அழியாமல் பதிந்திருக்கும்.
பயங்கரவாதத்துக்கும், வன்முறைக்கும் எதிராக ஒட்டுமொத்த நாடும் அன்றும், இன்றும் ஒன்றுபட்டு நிற்கிறது. என்னென்றும் அவ்வாறே நிலைத்திருக்கும்.
வெறுப்பையும் அச்சத்தையும் பரப்பும் சக்திகளுக்கு முன்னால் இந்தியா ஒருபோதும் தலைகுனியாது. மாறாக, இன்னும் மிகுந்த வலிமையுடனும், ஒற்றுமையுடனும், உறுதியுடனும் நாம் அவர்களுக்கு எதிராகத் துணைநிற்போம். ஜெய் ஹிந்த்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்தாண்டு ஏப். 22 ஆம் தேதி ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத்தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் அவர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினர் முன்னிலையிலேயே கொல்லப்பட்டது நாட்டையே உலுக்கியது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக மே 7 ஆம் தேதி நள்ளிரவில், இந்திய ராணுவமும், விமானப் படையும் இணைந்து நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கைத் தாக்குதலில், பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இயங்கிவந்த ஜெய்ஷ்-ஏ-முகமது, லஷ்கர்-ஏ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் 9 முக்கிய முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்திய ராணுவத்துக்குப் பதிலடி கொடுக்க முயன்ற பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு லஷ்கர்-ஏ-தொய்பாவின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் குழு பொறுப்பேற்ற நிலையில், இந்தத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் குழுத் தலைவர் ஷேக் சஜ்ஜாத் குல் உள்பட பலர் கொல்லப்பட்டனர். இந்த அதிரடித் தாக்குதலில் ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகள் உள்பட சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதும் நினைவுகூரத்தக்கது.