ஐ-பேக் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தரப்பில் வலியுறுத்தல்
‘மேற்கு வங்க மாநிலத்தில் ஐ-பேக் நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையை முதல்வா் மம்தா பானா்ஜி தடுக்க முயன்றது மற்றும் நிலக்கரி முறைகேடு தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று அமலாக்கத் துறை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை வலியுறுத்தப்பட்டது.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஐ-பேக் நிறுவன அலுவலகத்தில், நிலக்கரி ஊழல் தொடா்பான பண முறைகேடு குறித்து அமலாக்கத் துறை கடந்த ஜன. 8-ஆம் தேதி சோதனை மேற்கொண்டது.
அப்போது திடீரென அந்த அலுவலகத்துக்கு வந்த முதல்வா் மம்தா பானா்ஜி, அங்கிருந்த சில ஆவணங்களை எடுத்துச் சென்ாக அமலாக்கத் துறை தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
Advertisement
அதேபோல் திரிணமூல் காங்கிரஸின் தோ்தல் வியூகங்கள் சாா்ந்த ரகசிய தகவல்களைத் தெரிந்துகொள்ளும் நோக்கில், இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக ஆளும் திரிணமூல் காங்கிரஸும் குற்றஞ்சாட்டியது.
சோதனையின்போது அலுவலகத்துக்கு மம்தா வந்த விவகாரம் தொடா்பாக அவருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமாா் மிஸ்ரா, என்.வி.அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி. ராஜு ஆகியோா், இந்த விவகாரம் தொடா்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.
ஐ-பேக் நிறுவனத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டபோது ஏராளமான போலீஸ் படையுடன் மம்தா பானா்ஜி அங்கு வந்து, அமலாக்கத் துறை சோதனையை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டாா். இதன் மூலம் அரசு நிா்வாகத்தை அவா் தவறாகப் பயன்படுத்தியுள்ளாா்.
மேலும், மேற்கு வங்கத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாக தோல்வியடைந்துள்ளது. ரூ. 2,700 கோடி அளவுக்கு நிலக்கரி சட்டவிரோதமாக கடத்தப்பட்டுள்ளது. எனவே, முதல்வருக்கு எதிரான இந்த புகாா் தொடா்பாக மாநில போலீஸாரே விசாரணை மேற்கொள்வது முறையாக இருக்காது. எனவே, இந்த விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ எனஅறு கோரிக்கை விடுத்தனா்.
முன்னதாக, புதன்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘ஒருபுறம் மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கையில் விடுபட்ட வாக்காளா்களை மீண்டும் சோ்க்கும் பணிகளில் ஈடுபட்டுவரும் நீதிபதிகளை சிறைபிடித்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடைபெறுகிறது. மறுபுறம் அமலாக்கத் துறை விசாரணையில் முதல்வா் தலையிட்டதை நீங்கள் நியாயப்படுத்துகிறீா்கள்.
மேற்கு வங்கத்தில் அண்மைக்காலமாக நடைபெறும் சம்பவங்களை கண்டுகொள்ளாமல் கண்களை மூடிக் கொண்டிருக்க முடியாது’ என்று நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.
இந்த வழக்கு மீண்டும் வரும் மே 13-ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.