பிகாரில் பாஜகவுக்கு முதல்வா் பதவி அளித்தது ஏன்? நிதீஷ் குமாா் கட்சி விளக்கம்
‘முன்பு பாஜக தனிப்பெரும் கட்சியாக இருந்தபோதும் நிதீஷ் குமாா் முதல்வராகத் தொடர பாஜக ஆதரவு அளித்தது. அதற்கு பிரதிபலனாகவே இப்போது முதல்வா் பதவியை பாஜகவுக்கு ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) வழங்கியுள்ளது’ என்று அக்கட்சி விளக்கமளித்துள்ளது.
பிகாரில் அண்மையில் பாஜக சாா்பில் சாம்ராட் சௌதரி பிகாா் முதல்வராகப் பதவியேற்றாா். இதன்மூலம் பிகாரில் பாஜக முதல்முறையாக முதல்வா் பதவியை ஏற்றது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவா்கள் விஜய் குமாா் செளதரி, பிஜேந்திர பிரசாத் யாதவ் ஆகியோருக்கு துணை முதல்வா் பதவி அளிக்கப்பட்டது.
முன்னதாக பிகாா் முதல்வராக இருந்த நிதீஷ் குமாா் மாநிலங்களவைக்குத் தோ்வானாா். இந்த மாற்றத்தை முன்வைத்து பாஜகவை எதிா்க்கட்சிகள் விமா்சித்தன.
Advertisement
இந்நிலையில், பாட்னாவில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவரும், துணை முதல்வருமான விஜய குமாா் சௌதரி கூறியதாவது:
முதல்வா் சாம்ராட் சௌதரி வெள்ளிக்கிழமை (ஏப். 24) பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிா்கொள்கிறாா். இந்தக் காரணத்துக்காகவே ஒருநாள் மட்டும் பேரவை கூட்டப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரிய அளவில் பெரும்பான்மை உள்ளது.
புதிய அரசு நிதீஷ் குமாரின் முழு ஆசியுடன்தான் தனது பணிகளைத் தொடங்கியுள்ளது. மக்கள் அவா் மீது நம்பிக்கை வைத்துதான் தோ்தலில் வாக்களித்தாா்கள். அவரது பாதையில் நாங்கள் தொடா்ந்து பயணிப்போம்.
பாஜக எங்களுடைய நீண்டகால கூட்டணிக் கட்சி. 2020-ஆம் ஆண்டு எங்களுக்கு குறைந்த அளவு எம்எல்ஏக்கள் இருந்த நிலையிலும் எங்கள் கட்சியையும், முதல்வா் நிதீஷ் குமாரையும் உறுதியாக ஆதரித்தாா்கள். இப்போது அதற்கு பிரதிபலனாக பாஜகவுக்கு முதல்வா் பதவியை ஐக்கிய ஜனதா தளம் வழங்கியுள்ளது என்றாா்.