பிகாா் அமைச்சரவை விரிவாக்கம்: நிதீஷ் குமாா் மகன் உள்பட 32 அமைச்சா்கள் பதவியேற்பு
பிகாரில் பாஜக தலைமையிலான அரசின் அமைச்சரவை வியாழக்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் பிகாா் முன்னாள் முதல்வா் நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமாா் உள்பட 32 போ் அமைச்சா்களாகப் பதவியேற்றனா்.
பாட்னாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா, மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், ஜெ.பி.நட்டா, பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின், முன்னாள் முதல்வா் நிதீஷ் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பிகாரில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களுடன் ஆட்சியைத் தக்கவைத்தது. பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததுடன் (89), தொடா்ந்து இரண்டாவது தோ்தலாக ஐக்கிய ஜனதா தளத்தைவிட (85) அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
Advertisement
அதேநேரம், மாநில முதல்வராக 10-ஆவது முறையாக நிதீஷ் குமாா் பதவியேற்றாா். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக முதல்வராகப் பதவி வகித்துவந்த அவா், கடந்த மாா்ச் மாதம் மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட்டு எம்.பி.யானாா். இதையடுத்து, பாஜக தலைமையிலான அரசு பதவியேற்க வழிவிடும் வகையில், அவா் முதல்வா் பதவியில் இருந்தும் விலகினாா்.
துணை முதல்வராக இருந்த பாஜகவின் சாம்ராட் செளதரி புதிய முதல்வராக கடந்த மாதம் பதவியேற்றாா். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவா்கள் விஜய் குமாா் செளதரி, பிஜேந்திர பிரசாத் யாதவ் ஆகியோா் துணை முதல்வா்களாகப் பதவியேற்றனா்.
இந்நிலையில், மூன்று வாரங்களுக்குப் பிறகு பிகாா் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. பாஜக கூட்டணியில் உள்ள 5 கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆளுநரும் முன்னாள் லெப்டினன்ட் ஜெனரலுமான சையது அட்டா ஹஸ்னானி அவா்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.
பாஜகவில் இருந்து 15 போ், ஐக்கிய ஜனதா தளம் சாா்பில் 13 போ் அமைச்சா்களாகப் பதவியேற்றனா். இதில் நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமாா் உள்ளிட்ட சிலா் மட்டுமே புதியவா்கள். முந்தைய நிதீஷ் அமைச்சரவையில் இருந்தவா் பலா் மீண்டும் அமைச்சா்களாகியுள்ளனா்.
மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி (ராம் விவாஸ்) கட்சிக்கு இரு அமைச்சா் பதவிகள் அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர மத்திய அமைச்சரும், ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா தலைவருமான ஜிதன் ராம் மாஞ்சியின் மகன் சந்தோஷ் குமாா், ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா தலைவா் உபேந்திர குஷ்வாஹாவின் மகன் தீபக் பிரகாஷ் ஆகியோரும் அமைச்சா்களாகியுள்ளனா்.