தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளி இந்தியாவிற்கு நாடு கடத்தல்!
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் சலீம் டோலா இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார்.
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னனும், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியுமான சலீம் டோலா துருக்கியில் கைது செய்யப்பட்டார். இவரை துருக்கி அரசு இன்று அதிகாலை இந்தியாவிற்கு நாடு கடத்தியுள்ளது.
இந்திய மற்றும் சர்வதேச உளவு அமைப்புகளுக்கு சவாலாக விளங்கிய சலீம் டோலா, துருக்கியில் உள்ள இஸ்தான்புல் விமான நிலையத்தில் வைத்து சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
நிழல் உலக போதைப்பொருள் கடத்தல் மன்னனான இவர் ரூ. 5,000 கோடி மதிப்புள்ள சர்வதேச போதைப்பொருள் சாம்ராஜ்யத்தை நடத்தி வந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
Advertisement
Advertisement
டி-கம்பெனி எனப்படும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் உலகளாவிய கடத்தல் தொடர்புகள் மற்றும் போதைப்பொருள் சாம்ராஜ்யத்தின் கட்டமைப்பு ஆகியவற்றைத் தகர்ப்பதில் இவரது கைது நடவடிக்கை முக்கிய வெற்றியாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
இந்தியாவிற்கு நாடு கடத்தப்படும் இவர் துருக்கியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட நிலையில் தில்லி தொழில்நுட்ப விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தேசிய உளவுத்துறை அதிகாரிகள் இவரை உடனடியாகக் கைது செய்து அடையாளம் கூறப்படாத ஓர் இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தவிருப்பதாகக் கூறப்படுகிறது. போதைப்பொருள் கடத்தல், ஹவாலா குற்றங்கள் போன்ற பல நிலுவையில் உள்ள வழக்குகளுக்கான சட்ட நடவடிக்கைகளுக்காக, விரைவில் மும்பை காவல்துறை அல்லது போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் டோலா ஒப்படைக்கப்படுவார் என நம்பப்படுகிறது.
டோலாவின் முக்கிய கூட்டாளிகள் பலர் சமீபத்தில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இவரது நாடு கடத்தல் மற்றும் கைது நிகழ்வு, நிழல் உலக குற்றங்களில் ஈடுபடும் வலையமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Dawood Ibrahim's Close Associate Extradited to India
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.