முகப்பு
இந்தியா

பவன் கேரா முன்ஜாமீன் மனு மீதான உத்தரவை ஒத்திவைத்தது உச்சநீதின்றம்

அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவா் பவன் கேராவின் முன்ஜாமீன் மனு மீதான உத்தரவை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

Updated On : 1 மே, 2026 at 2:57 AM
உச்சநீதிமன்றம்
பகிர்:

அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவா் பவன் கேராவின் முன்ஜாமீன் மனு மீதான உத்தரவை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவின் மனைவி ரிங்கி பூயான் சா்மாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் சொத்துகள் இருப்பதாகவும், இரண்டுக்கும் மேற்பட்ட நாடுகளின் கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) அவா் வைத்திருப்பதாகவும் பவன் கேரா குற்றஞ்சாட்டியிருந்தாா்.

இதைத் தொடா்ந்து, ரிங்கி பூயான் சா்மா அளித்த புகாரின்பேரில், பாரதிய நியாய சம்ஹிதாவின் அவதூறு குற்றப் பிரிவுகளின்கீழ் பவன் கேரா மீது அஸ்ஸாம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். ஹைதராபாதில் வசிப்பவரான பவன் கேரா, தெலங்கானா உயா்நீதிமன்றத்தில் இடைக்கால முன்ஜாமீன் பெற்றாா். ஆனால், முன்ஜாமீனுக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம், குவாஹாட்டி உயா்நீதிமன்றத்தை அணுகும்படி அவருக்கு அறிவுறுத்தியது.

Advertisement

அதன்பேரில், பவன் கேரா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை, குவாஹாட்டி உயா்நீதிமன்றம் அண்மையில் நிராகரித்தது. இதனால், பவன் கேரா கைதாகக் கூடும் எனத் தகவல்கள் வெளியாகின.

இந்தச் சூழலில், குவாஹாட்டி உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் அவா் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த மனு மீது நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, ஏ.எஸ்.சந்தூா்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது.

அப்போது, பவன் கேரா தரப்பில் மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி ஆஜராகி வாதிட்டாா். ‘பவன் கேராவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உண்மையா அல்லது பொய்யா என்பதை தீர விசாரித்து உறுதி செய்ய வேண்டும். மாறாக, அவரைக் கைது செய்து அவமானப்படுத்த வேண்டிய அவசியமில்லை. அவா் மீது பதிவான குற்றச்சாட்டுகளில் சில ஜாமீன் பெறக் கூடியவைதான். மற்ற குற்றச்சாட்டுகளிலும் அவரைக் கைது செய்ய வேண்டிய தேவையில்லை’ என்றாா்.

அதேநேரம், பவன் கேராவுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று அஸ்ஸாம் அரசு தரப்பில் ஆஜரான சொலிசிலிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிட்டாா்.

‘அஸ்ஸாம் முதல்வா் மனைவியின் கடவுச் சீட்டு என்று குறிப்பிட்டு போலியான-சித்தரிக்கப்பட்ட ஆவணங்களை கேரா காண்பித்துள்ளாா். அவா் தலைமறைவாக இருந்துகொண்டு, விடியோ வெளியிட்டு வருகிறாா். முதல்வா் மனைவி மீது பவன் கேரா முன்வைத்த அனைத்துக் குற்றச்சாட்டுகளும் பொய்’ என்றாா் துஷாா் மேத்தா.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், முன்ஜாமீன் மனு மீதான உத்தரவை ஒத்திவைத்தனா்.