பவன் கேரா 2-வது நாளாக அஸ்ஸாம் குற்றப்பிரிவு முன் ஆஜர்!
பவன் கேரா கவால்துறை குற்றப்பிரிவு முன்பு ஆஜரானது பற்றி..
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தந பிஸ்வ சர்மாவின் மனைவி ரினிகி புயன் சர்மா தொடர்ந்த வழக்குகள் தொடர்பாகக் காங்கிரஸ் தலைவர் பவன் கேரா தொடர்ந்து இரண்டாவது நாளாக அஸ்ஸாம் கவால்துறை குற்றப்பிரிவு முன்பு ஆஜரானார்.
முதல்வரின் மனைவி ரினிகி புயன் பல கடவுச்சீட்டுகளும், வெளிநாடுகளில் சொத்துக்களை வைத்திருப்பதாகப் பவன் கேரா குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
முன்னதாக புதன்கிழமையன்று காவல்துறையின் குற்றப்பிரிவில் ஆஜரான பவன் கேராவிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியதுடன், இன்று மீண்டும் ஆஜராகுமாறு குற்றப்பிரிவு போலீஸார் அவருக்கு உத்தரவிட்டனர்.
Advertisement
இதையடுத்து, ஆஜராவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய பவன் கேரா, "நான் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். இன்றும் அவ்வாறே ஒத்துழைப்பேன்" என்று அவர் தெரிவித்தார்.
விசாரணை தொடர்பான விவரங்களை அவர் வெளியிடவில்லை. விசாரணை முழுவதும் நிறைவடைந்த பின்னரே இது குறித்துப் பேசுவேன் என்று அவர் கூறினார்.
புதனன்று இரவு குற்றப்பிரிவு அலுவலகத்தின் வெளியே வந்த அவர் கூறியதாவது,
நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன். அரசியலமைப்புச் சட்டம் நடைமுறையில் இருப்பதால், அதற்கு ஒத்துழைப்பது எனது கடமையாகும். நான் அதைக் கட்டாயம் கடைப்பிடிப்பேன் என்று அவர் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக முதல்வர் ஹிமந்த கூறியதாவது,
சட்டம் தன் கடமையைச் செய்யும். பவன் கேரா சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானவை என மத்திய அரசிடமிருந்து நாங்கள் ஏற்கெனவே எழுத்துப்பூர்வமான தகவலைப் பெற்றுள்ளோம்.
எனவே, காவல்துறையின் விசாரணைகள் அதிக காலம் எடுத்துக்கொள்ளாது, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய இயலும் என அவர் தெரிவித்தார்.