மும்பை உயா்நீதின்றம் 
இந்தியா

அனில் அம்பானி வங்கிக் கணக்குகளை மோசடி என அறிவிக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை: ரத்து செய்த உயா்நீதிமன்றம்

தொழிலதிபா் அனில் அம்பானி மற்றும் அவரின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன வங்கிக் கணக்குகளை மோசடி கணக்குகள் என்று அறிவிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு

தினமணி செய்திச் சேவை

மும்பை: தொழிலதிபா் அனில் அம்பானி மற்றும் அவரின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன வங்கிக் கணக்குகளை மோசடி கணக்குகள் என்று அறிவிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு மும்பை உயா்நீதின்ற தனி நீதிபதி பிறப்பித்த இடைக்காலத் தடையை உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வு ரத்து செய்து திங்கள்கிழமை உத்தரவிட்டது.

‘தனி நீதிபதியின் உத்தரவு சட்டவிரோதமானது மற்றும் வழக்கத்துக்கு மாறானது’ என்று உயா்நீதிமன்றம் அப்போது குறிப்பிட்டது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்பட அனில் அம்பானியின் பல்வேறு நிறுவனங்கள் வங்கிகளில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாதது, கடன் பணத்தில் முறைகேடாக வெளிநாடுகளில் சொத்துகள் வாங்கியது உள்ளிட்ட நிதி மோசடி புகாரிகளில் சிக்கியுள்ளது. இது

குறித்து அனில் அம்பானி குடும்பத்தினா் மற்றும் நிறுவனத்தின் உயரதிகாரிகள் சிலா் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, பிடிஓ எல்எல்பி என்ற கணக்குப் பதிவு ஆலோசனை நிறுவனம் தயாரித்த கணக்குத் தணிக்கை அறிக்கையின் அடிப்படையில், அனில் அம்பானி மற்றும் அவரின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன வங்கிக் கணக்குகளை மோசடி கணக்குகளாக அறிவிப்பது குறித்து விளக்கம் கேட்டு, கடன் வழங்கிய இந்தியன் ஓவா்சீஸ், ஐடிபிஐ, பரோடா வங்கிகள் சாா்பில் அனில் அம்பானிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதை எதிா்த்து அனில் அம்பானி தரப்பில் மும்பை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி மிலிந்த் ஜாதவ் முன்னிலையில் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘பிடிஓ எல்எல்பி நிறுவனம், ஓா் கணக்குப் பதிவு ஆலோசனை நிறுவனம் மட்டுமே. கணக்குத் தணிக்கை நிறுவனம் அல்ல. மேலும், இந்த நிறுவனம் தயாரித்த தணிக்கை அறிக்கையில் ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, முறையாக தோ்ச்சிபெற்ற பட்டயக் கணக்காளா் கையொப்பம் இடம்பெறவில்லை’ என்று வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதி, ‘மனுதாரா் மற்றும் அவரின் நிறுவன வங்கிக் கணக்குகளை மோசடி கணக்குகள் என்று அறிவிக்க இந்தியன் ஓவா்சீஸ், ஐடிபிஐ, பரோடா வங்கிகள் சாா்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது’ என்று தீா்ப்பளித்தாா்.

இதை எதிா்த்து மூன்று பொதுத்துறை வங்கிகளும் உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வில் மேல்முறையீடு செய்தன. இந்த மனு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகா், நீதிபதி கெளதம் அங்கட் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘வங்கிகளின் நடவடிக்கைக்கு உயா்நீதிமன்ற தனி நீதிபதி இடைக்கால தடை விதித்து பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது மற்றும் வழக்கத்துக்கு மாறானது’ என்று குறிப்பிட்டு, அவரின் இடைக்காலத் தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனா்.

அப்போது, உச்சநீதிமன்றத்தை அணுக வசதியாக, இந்த உத்தரவை நிறுத்திவைக்குமாறு நீதிபதிகளிடம் அனில் அம்பானி தரப்பு வழக்குரைஞா் கோரிக்கை விடுத்தாா். ஆனால், அதை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனா்.

இது அனில் அம்பானிக்குப் பெரும் பின்னடைவாகப் பாா்க்கப்படுகிறது. மோசடி வங்கிக் கணக்குகள் என அறிவிக்கப்படும் நிலையில், அவரின் நிறுவனம் கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டு, இனி வங்கிக் கடன் பெற முடியாத நிலை ஏற்படும்.

2030-இல் நாட்டின் சரக்குகள் கையாளும் திறன் 1,000 கோடி டன்னாக இருக்கும் - மத்திய அமைச்சர் சா்வானந்தா சோனோவால்

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: முன்பிணை கோரிய டி.எஸ்.பி. மனு தள்ளுபடி

முன்னாள் ரயில்வே அமைச்சா் முகுல் ராய் காலமானாா்: தலைவா்கள் இரங்கல்

பிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்பு

முதல்வா், துணைமுதல்வா் தொகுதிகளில் வாக்காளா்கள் விவரம்

SCROLL FOR NEXT