வெறுப்புணர்வைப் பரப்பும் கருத்து வெளியிட்டதாகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டில் அஸ்ஸாம் முதல்வருக்கு குவாஹாட்டி உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை (பிப். 26) நோட்டீஸ் அனுப்பியது.
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா மீது ‘வெறுப்புப் பேச்சு’ பகிர்வதாகக் குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுக்கள் மீதான விசாரணை குவாஹாட்டி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அஷுடோஷ் குமார் மற்றும் நீதிபதி அருன் தேவ் சௌத்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை (பிப். 26) நடைபெற்றது. ஹிமந்த பிஸ்வ சர்மா மீது பழி சுமத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ‘அண்மையில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது பேசிய அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, தாம் சார்ந்துள்ள அரசியல் கட்சித் தொண்டர்களிடம் (பாஜகவினர்), வங்கத்தைப் பூர்வீகமாகக் கொண்ட முஸ்லீம்களுக்கு இன்னலும் தொல்லையும் அளிக்கும் விதத்தில், அந்த மக்கள் மீது புகார்கள் அளிக்குமாறு தாம் அறிவுறுத்தியதாக வெளிப்படையாகப் பேசியிருந்தார்.’
‘அவரது இத்தகைய கருத்துகள் சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும். அஸ்ஸாமில் உள்ளதொரு சிறுபான்மையின சமூகத்தைக் குறிவைத்து வெளிப்படுத்தப்பட்டுள்ள அவரது வெறுப்புப் பேச்சின் மூலம், அரசமைப்பில் உயர் பதவி வகிக்கும் அஸ்ஸாம் முதல்வர் தாம் அரசமைப்பின் மீது உறுதியேற்று எடுத்துக்கொண்ட பதவிப்பிரமாணத்தை மீறிச் செயல்படுகிறார்’ என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, இவ்விவகாரத்தில் அஸ்ஸம் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் கடந்த பிப். 16-ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டதுடன் உயர்நீதிமன்றத்தில் முறையிடவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், இவ்வழக்கு விசாரணையில், இவ்விவகாரத்தில் உரிய விளக்கமளிக்க அஸ்ஸாம் முதல்வருக்கும் அம்மாநில அரசுக்கும் அம்மாநில காவல்துறை டிஜிபிக்கும் உயர்நீதிமன்றத்தால் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதுடன், அடுத்தக்கட்ட விசாரணை ஏப்ரல் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.