அஸ்ஸாம் முதல்வராக மே 12ல் பதவியேற்கிறார் ஹிமந்த பிஸ்வ சர்மா!
அஸ்ஸாமின் முதல்வராக ஹிமந்த பிஸ்வ சர்மா மே 12ஆம் தேதி மீண்டும் பதவியேற்க உள்ளார்.
அஸ்ஸாமின் முதல்வராக ஹிமந்த பிஸ்வ சர்மா மே 12ஆம் தேதி மீண்டும் பதவியேற்க உள்ளார்.
126 தொகுதிகளைக் கொண்ட அஸ்ஸாமில் பாஜக தொடா்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. பாஜக 82 இடங்களையும், அதன் கூட்டணி கட்சிகள் 20 இடங்களையும் கைப்பற்றின. வெறும் 19 இடங்களுடன் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது.
இந்த நிலையில் குவாஹாட்டியில் வெற்றி பெற்ற பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், பாஜக சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஹிமந்த பிஸ்வ சர்மா ஞாயிற்றுக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து பாஜக தலைமையிலான தேஜ கூட்டணியின் தலைவராகவும் அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Advertisement
இதைத்தொடர்ந்து மாநிலத்தில் இரண்டாவது முறையாக முதல்வராக ஹிமந்த பிஸ்வ பொறுப்பேற்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்தார். அதேசமயம் முதல்வராக ஹிமந்த பிஸ்வ சர்மா மே 12ஆம் தேதி மீண்டும் பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேஜ கூட்டணி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு சட்டப்பேரவை உறுப்பினர்களிடையே உரையாற்றிய ஹிமந்த பிஸ்வா சர்மா, கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் மக்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார். மேலும், ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாகவும் அவர் கூறினார்.