மேற்கு வங்கம்: விடுதி அறையில் இருந்து மருத்துவ மாணவரின் சிதைந்த உடல் மீட்பு
மேற்கு வங்கத்தில் விடுதி அறையில் இருந்து மருத்துவ மாணவரின் சிதைந்த உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் விடுதி அறையில் இருந்து மருத்துவ மாணவரின் சிதைந்த உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டத்தின் கல்யாணி பகுதியில் மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்குள்ள ஆண்கள் விடுதி அறையில் இருந்து வியாழக்கிழமை இறுதியாண்டு மருத்துவ மாணவரின் சிதைந்த உடல் மீட்கப்பட்டது.
பலியானவர் புலக் ஹால்டர்(24) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் இறுதியாண்டு இளங்கலை மருத்துவ மாணவர் ஆவார். அவரது அறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதை விடுதியில் இருந்தவர்கள் கவனித்ததை அடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
Advertisement
அறையின் ஜன்னல் வழியாக பார்த்தபோது படுக்கையில் மாணவர் இறந்துகிடப்பதை விடுதி ஊழியர்கள் கண்டனர். உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்த அவரது அறையின் கதவை உடைத்து போலீஸார் உடலை மீட்டனர். உடல் கூராய்வுக்காக பிணவறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இயற்கைக்கு மாறான மரணம் என போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மாணவர் ஹால்டர், அறையில் தனியாக தங்கியதாகவும், மார்ச் 5ஆம் தேதி இறுதி செமஸ்டர் தேர்வு தொடங்க இருந்ததாகவும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக பிப்ரவரி 15 ஆம் தேதி துர்காபூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் விடுதி குளியலறையில் இருந்து மருத்துவ மாணவர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
10 நாட்களுக்குப் பிறகு தற்போது மேலும் ஒரு மருத்துவ மாணவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.