பஞ்சாப் அரசுப் பள்ளிகளில் ‘செய்யறிவு’ கல்வி அறிமுகம்: கல்வி அமைச்சர் அறிவிப்பு
பஞ்சாப் மாநில அரசுப் பள்ளிகளில் ‘செய்யறிவு’ கல்வி அறிமுகம் குறித்து...
லூதியானா: பஞ்சாப் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அடுத்த மாதம் முதல் ‘செய்யறிவு’ (ஏஐ) பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அம்மாநில கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ் அறிவித்தார்.
குரு நானக் தேவ் பவனில் நடைபெற்ற 'பிரைட் மைண்ட்ஸ் பஞ்சாப் 2026' நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், பஞ்சாப் வாரியத் தேர்வுகளில் 95 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்ற 12-ஆம் வகுப்பு மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
Advertisement
Advertisement
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ‘செய்யறிவு’ கல்வி அறிமுகம்
பின்னர் பேசிய கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ், கடந்த ஓராண்டாக இந்த ‘செய்யறிவு’ திட்டத்திற்கான பணிகளை அரசு மேற்கொண்டு வந்ததாகவும், தற்போது அதனை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அறிமுகப்படுத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அரசுப் பள்ளி மாணவர்கள் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை அறிந்துகொள்வதையும், உயர்கல்வி மற்றும் எதிர்காலத் தொழில் வாழ்க்கையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த திறன்களை வளர்த்துக்கொள்வதை உறுதி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கம் என்று அவர் கூறினார்.
கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து மாணவர்களிடம் கருத்து
தேர்வு முறை, பள்ளிப் பாடத்திட்டம் மற்றும் வகுப்பறை கற்பித்தல் முறைகள் குறித்து மாணவர்களின் கருத்துகளை அறிந்துகொள்ளவதற்காக கல்வி அமைச்சரும் கல்வித் துறைச் செயலாளரும் நேரடியாக மாணவர்களுடன் கலந்துரையாடிய முதல் நிகழ்வு இதுவாகும்.
மாணவர்களிடமிருந்து பெறப்படும் கருத்துகள் எதிர்காலக் கல்விக் கொள்கைகளை வடிவமைக்கும்போது கருத்தில் கொள்ளப்படும் என்றும், மாநிலத்தின் கல்வி அமைப்பைப் பாதிக்கும் சீர்திருத்தங்களில் மாணவர்களுக்கு முக்கியப் பங்கு அளிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மாணவர்கள் கௌரவிப்பு
பஞ்சாப் வாரியத் தேர்வுகளில் 95 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்ற 12-ஆம் வகுப்பு மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அமைச்சர் பெயின்ஸ், அவர்கள் பஞ்சாப் மற்றும் நாட்டின் எதிர்காலம் என்றும், அவர்களில் பலர் குடிமைப் பணி அதிகாரிகள், மருத்துவர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் நிபுணர்களாகத் திகழ்ந்து நாட்டிற்குச் சேவையாற்றுவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பஞ்சாப் முதலிடம்
மாநிலத்தின் கல்வித் துறை முன்னேற்றத்தைச் சுட்டிக்காட்டி பேசிய பெயின்ஸ், நாட்டின் கல்விச் சுட்டெண்ணில் பஞ்சாப் முதலிடத்தைப் பிடித்துள்ளதாகவும், இந்த் சாதனைக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரசின் கூட்டு முயற்சியே காரணம் என்று குறிப்பிட்ட அவர், தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் மாநிலத்தின் பள்ளிக்கல்வி அமைப்பை வலுப்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.
தரமான கல்வி
இந்த நிகழ்ச்சியில் செய்யறிவு(ஏஐ) கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசிய தில்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, எந்தவொரு நாட்டின் முன்னேற்றமும் அதன் கல்வி முறையின் தரத்தையே சார்ந்திருக்கிறது. மேலும், ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வியை உறுதி செய்வதே அரசின் முதன்மையான பொறுப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
செய்யறிவு தொழில்நுட்பம்(ஏஐ) புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, தற்போதுள்ள பல வேலைகளின் தன்மையையும் மாற்றியமைக்கிறது. இத்தகைய சூழலில், மாறிவரும் பணிச்சூழலுக்குத் தயாராகும் வகையில் மாணவர்கள் நவீன தொழில்நுட்பத் திறன்களைப் பெற்றிருக்க வேண்டும், பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
மாணவர்கள் மதிப்பீட்டு முறையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்றும், பள்ளிகளில் முறைகேடுகளைத் (தேர்வு முறைகேடுகளை) தவிர்த்து அறிவியல் பூர்வமான கற்பித்தல் முறைகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளை சிசோடியா கேட்டுக்கொண்டார்.
சமூக பங்களிப்புக்கு முன்வர வேண்டும்
போதைப்பொருள் பயன்பாடு, வேலையின்மை மற்றும் கல்வி முறையில் உள்ள குறைபாடுகள் போன்ற முக்கியமான சமூகச் சவால்களை எதிர்கொள்வதில் ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஊக்குவித்து பேசிய கல்வித்துறைச் செயலாளர் சோனாலி கிரி, அரசியலமைப்பு விழுமியங்களைக் கடைப்பிடித்தல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் நாட்டின் கலாசார பாரம்பரியத்தைக் காத்தல் ஆகியவற்றுக்கான உறுதிமொழியையும் மாணவர்களை ஏற்கச் செய்தார்.
செய்யறிவு நுண்ணறிவுப் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது, அரசுப் பள்ளிக் கல்வியை நவீனமயமாக்குவதற்கான பஞ்சாப் அரசின் சமீபத்திய முயற்சியாகும். தொழில்நுட்பம் சார்ந்த கற்றல், கொள்கை சீர்திருத்தங்கள் மற்றும் மாணவர்களின் பங்கேற்பு ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம், டிஜிட்டல் திறன்கள் மற்றும் செய்யறிவு ஆகியவை முக்கியப் பங்காற்றவுள்ள எதிர்காலப் பொருளாதாரத்திற்கு இளம் மாணவர்களைத் தயார்படுத்த மாநில அரசு முயற்சிக்கிறது என கல்வித்துறைச் செயலாளர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Punjab Education Minister Harjot Singh Bains on Thursday announced that an AI curriculum will be introduced in all government schools across the state from next month
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.