மின்-ஆளுமைக்கான தேசிய விருதுகள் 2026: ஐசிஎம்ஆர் தங்கப் பதக்கம் வென்றது!
தேசிய சுகாதார ஆராய்ச்சி முன்னுரிமைத் திட்டம் எனப்படும் ஐசிஎம்ஆர் - மைண்ட்ஸ்-க்கு தங்கம் பதக்கம் கிடைத்துள்ளது தொடர்பாக...
புதுதில்லி: மின்-ஆளுமைக்கான தேசிய விருது 2026-இல் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் திட்டமான, தேசிய சுகாதார ஆராய்ச்சி முன்னுரிமைத் திட்டம் எனப்படும் ஐசிஎம்ஆர் - மைண்ட்ஸ்-க்கு தங்கம் பதக்கம் கிடைத்துள்ளது.
நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் தீர்ப்புத் துறை சார்பில் வழங்கப்படும் விருதுகளில் ஐசிஎம்ஆர் தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
மின்-ஆளுகைக்கான இந்த தேசிய விருதுகளில், 'மக்களை மையமாகக் கொண்ட சேவைகளை வழங்குவதற்காக செய்யறிவையும் பிற நவீன கால தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துவதன் மூலம் புதுமை படைத்தல்' என்ற பிரிவு 2-ன் கீழ் ஐசிஎம்ஆர் தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளது.
Advertisement
Advertisement
இந்த விருதை, மத்திய பணியாளர் நலன், பொது மக்கள் குறை தீர்ப்பு, நிர்வாக சீர்திருத்தங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஐசிஎம்ஆர்-க்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், ராஜஸ்தான் அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கர்னல் ராஜ்யவர்தன் ரத்தோர், ராஜஸ்தான் அரசின் தலைமைச் செயலாளர் வி. சீனிவாஸ், மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் துறை செயலாளர் நிவேதிதா சுக்லா வர்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜூலை 1, 2 தேதிகளில் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெற்ற 29-ஆவது தேசிய மின்-ஆளுகை மாநாட்டின் போது இந்த விருது வழங்கப்பட்டது.
ஐசிஎம்ஆர்-மைண்ட்ஸ் என்பது, "மனநலம் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டுக் கோளாறுகளைக் கண்டறிதல், சிகிச்சை அளித்தல் ஆகியவற்றை, தொற்றா நோய்களுக்கான சேவைகளுடன் ஒருங்கிணைப்பது குறித்த ஒரு செயல்முறை ஆராய்ச்சித் திட்டமாகும்".
இதன் 'மருத்துவ முடிவெடுக்கும் ஆதரவு அமைப்பு', ஆதாரங்களின் அடிப்படையிலான டிஜிட்டல் ஆதரவுடன், தரப்படுத்தப்பட்ட மனநலப் பரிசோதனை, மதிப்பீடு, சிகிச்சை அளித்தல் மற்றும் வழக்கமான மேலாண்மைப் பணிகளை நிபுணர்களிடமிருந்து பயிற்சி பெற்ற நிபுணரல்லாத முன்னணி சுகாதாரப் பணியாளர்களுக்கு மாற்ற உதவுகிறது.
இதன் மூலம், நிபுணர்கள் சிக்கலான வழக்குகளில் கவனம் செலுத்தும் அதே வேளையில், நிலையான நோயாளிகள் தங்களுக்கு அருகிலுள்ள சுகாதார நிலையத்தில் தொடர் சிகிச்சையைப் பெற முடிகிறது. இது நிபுணர்களின் நேரத்தை மேம்படுத்துகிறது, தரப்படுத்தப்பட்ட மனநலப் பராமரிப்பை வழங்க முன்னணி வழங்குநர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது, சிகிச்சை இணக்கத்தை மேம்படுத்துகிறது, மூன்றாம் நிலை பராமரிப்பு மையங்களின் சுமையைக் குறைக்கிறது, மேலும் தொடர் பராமரிப்பு முழுவதும் நோயாளிகள் சிகிச்சையிலிருந்து விலகுவதைக் குறைக்கிறது. இந்த முயற்சி ஏழு மாநிலங்களில், ஏழு கூட்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
தங்கப் பதக்கம் வென்றது குறித்து பேசிய, ஐசிஎம்ஆர்-ன் தலைமை இயக்குநர் மருத்துவர் ராஜீவ் பஹல், சிக்கலான பொது சுகாதார சவால்களைத் தீர்ப்பதற்காக, தரவு சார்ந்த தொழில்நுட்பத் தலையீடுகளில் ஐசிஎம்ஆர் தொடர்ந்து முன்னோடியாகச் செயல்படுகிறது. பங்கேற்கும் நிறுவனங்கள் மற்றும் மாநில சுகாதார அமைப்புகளுடனான தொடர்ச்சியான ஒத்துழைப்பின் மூலம் நாட்டு மக்களுக்கு குறைந்த செலவில், தரப்படுத்தப்பட்ட, உயர்தரமான சுகாதாரப் பராமரிப்புத் தளங்களை வழங்குவதில் ஐசிஎம்ஆர் உறுதியாக உள்ளது என்று கூறினார்.
பங்கேற்கும் மாநிலங்கள் முழுவதிலும் உள்ள அசாம், குஜராத், ஹரியாணா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஒடிஸா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் சுகாதாரத் துறைகள், மாநில மனநலம் மற்றும் தொற்றா நோய்கள் திட்டக் குழுக்கள், மாவட்ட சுகாதார அதிகாரிகள், முதன்மை ஆய்வாளர்கள், இணை முதன்மை ஆய்வாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் களக் குழுக்கள் ஆகியோருடனான நெருங்கிய ஒத்துழைப்பின் மூலமே ஐசிஎம்ஆர்-மைண்ட்ஸ் திட்டத்தின் வெற்றி சாத்தியமாகியுள்ளது என்று அவர் கூறினார்.
ICMR-MINDS receives DARPG honour for Al-enabled citizen-centric healthcare innovation
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.