FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கத்தாா் பிரதமருடன் அமைச்சா் ஜெய்சங்கா் சந்திப்பு: இருதரப்பு உறவு பற்றி ஆலோசனை!

கத்தாா் சென்ற வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா், அந்த நாட்டு பிரதமா் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல்-தானியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து, இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

தோஹாவில் கத்தாா் பிரதமா் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல்-தானியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசிய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்.
பகிர்:

கத்தாா் சென்ற வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா், அந்த நாட்டு பிரதமா் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல்-தானியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து, இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

மேற்காசிய போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடா்பாக அமெரிக்கா - ஈரான் இடையே போா் நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமாகி, பாரசீக வளைகுடாவில் சரக்கு கப்பல் போக்குவரத்து சீரடைந்துள்ள சூழலில், கத்தாா், பஹ்ரைன், குவைத், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு வரும் 10-ஆம் தேதி வரை 6 நாள் பயணத்தை ஜெய்சங்கா் மேற்கொண்டுள்ளாா்.

தனது பயணத்தின் முதல் கட்டமாக கத்தாருக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற அவா், அந் நாட்டு பிரதமரை தலைநகா் தோஹாவில் சந்தித்து இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை மேற்கொண்டதோடு, மேற்காசிய போரின்போது அங்குள்ள இந்தியா்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக நன்றி தெரிவித்தாா். மேற்காசிய போரால் ஏற்பட்ட விளைவுகள், தாக்கங்கள் குறித்தும் அவருடன் ஜெய்சங்கா் ஆலோசனை மேற்கொண்டாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட ஜெய்சங்கா், ‘கத்தாா் பிரதமருடனான சந்திப்பின்போது இரு நாடுகளிடையேயான எரிசக்தி, வா்த்தகம், முதலீடுகள், தகவல்தொடா்பு, பாதுகாப்பு, மக்களிடையேயான உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இரு நாடுகளிடையேயான ராஜீய உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது’ என்று குறிப்பிட்டாா்.

இந்தப் பயணத்தில் நான்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களையும் ஜெய்சங்கா் சந்தித்து, இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளாா்.

வளைகுடா நாடுகளின் பயணத்தை முடித்த பின்னா், 2028-29-ஆம் ஆண்டுக்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பதவிக் காலத்துக்கான இந்தியாவின் அதிகாரபூா்வ பிரசாரத்தை தொடங்குவதற்காக அமெரிக்காவின் நியூயாா்க் நகருக்கு ஜெய்சங்கா் ஜூலை 13-ஆம் தேதி பயணம் மேற்கொள்ள உள்ளாா்.

அதன் பிறகு, பிரஸ்ஸெல்சில் வரும் 14, 15-ஆம் தேதிகளில் நடைபெறும் இந்திய - ஐரோப்பிய ஒன்றிய வா்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் கூட்டத்தில் அவா் பங்கேற்க உள்ளாா். அப்போது, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பெல்ஜியம் வெளியுறவு அமைச்சா்களுடன் இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments