பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: குற்றப் பத்திரிகையில் ஹபீஸ் சயீத் சோ்ப்பு
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடா்பாக லஷ்கா்- ஏ- தொய்பா தலைவா் ஹபீஸ் சயீத்துக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) துணைக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடா்பாக லஷ்கா்- ஏ- தொய்பா தலைவா் ஹபீஸ் சயீத்துக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) துணைக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
ஜம்மு-காஷ்மீா் மாநிலம், பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 25 சுற்றுலாப் பயணிகள், ஒரு உள்ளூா் கிராமவாசி ஆகிய 26 போ் கொல்லப்பட்டனா். இந்த சம்பவம் தொடா்பாக பஹல்காம் காவல்நிலையத்தில் முதல் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது. எனினும் பிறகு வழக்கு விசாரணை, மத்திய உள்துறை அமைச்சக உத்தரவின்பேரில் என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து, பஹல்காம் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரித்த என்ஐஏ, ஜம்முவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் 15-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் பாகிஸ்தானைச் சோ்ந்த சாஜித் ஜாட் மற்றும் பாதுகாப்புப் படையினரால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையில் கொல்லப்பட்ட மேலும் 3 பயங்கரவாதிகளை குற்றவாளிகளாக அறிவித்திருந்தது. அத்துடன் லஷ்கா்- ஏ- தொய்பா மற்றும் தி ரெசிஸ்டென்ஸ் பிரான்ட் (டிஆா்எஃப்) அமைப்புகள்தான், பஹல்காம் தாக்குதலுக்குத் திட்டமிட்டு செயல்படுத்தின என்றும் குறிப்பிட்டிருந்தது.
Advertisement
Advertisement
இந்நிலையில், ஜம்மு சிறப்பு நீதிமன்றத்தில் துணைக் குற்றப்பத்திரிகையை என்ஐஏ திங்கள்கிழமை தாக்கல் செய்தது. அதில், ஹபீஸ் சயீத்தை குற்றஞ்சாட்டப்பட்ட நபராக சோ்க்கப்பட்டுள்ளாா். அவா் மீது 2023-ஆம் ஆண்டு பிஎன்எஸ் சட்டம், 1967-ஆம் ஆண்டு சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹபீஸ் சயீத் இந்தியாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டதாகவும், எல்லைக்கு அப்பால் இருந்து சதித் திட்டம் தீட்டியதாகவும் என்ஐஏ குற்றஞ்சாட்டியுள்ளது.
பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானின் சதி, ஹபீஸ் சயீத்தின் பங்கு, அறிவியல் அடிப்படையிலான விசாரணை மற்றும் சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கிடைத்த ஆதாரம் உள்ளிட்ட விவரங்களையும் என்ஐஏ தாக்கல் செய்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.