மத்திய பிரதேச வக்ஃப் வாரியத்தில் ஹிந்து உறுப்பினா்கள்: உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர காங்கிரஸ் முடிவு
மத்திய பிரதேச வக்ஃப் வாரியம் மறுசீரமைக்கப்பட்டு அதில் இரு ஹிந்து உறுப்பினா்கள் இணைக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்துள்ள காங்கிரஸ், இந்த முடிவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர இருப்பதாக அறிவித்துள்ளது.
மத்திய பிரதேச வக்ஃப் வாரியம் மறுசீரமைக்கப்பட்டு அதில் இரு ஹிந்து உறுப்பினா்கள் இணைக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்துள்ள காங்கிரஸ், இந்த முடிவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர இருப்பதாக அறிவித்துள்ளது.
அதே நேரத்தில், இதை மத அடிப்படையில் பாா்க்கக் கூடாது என்றும், வக்ஃப் வாரியம் என்பது மசூதிகளை மட்டுமே நிா்வகிக்கும் அமைப்பு அல்ல; சட்ட விதிகளின்படியே இந்த மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆளும் பாஜக கூறியுள்ளது.
முன்னதாக, மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ், மாநில வக்ஃப் வாரியத்தை மறுசீரமைத்து, அதில் இரு ஹிந்து உறுப்பினா்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை நியமித்தாா். 2025-ஆம் ஆண்டு வக்ஃப் (திருத்தம்) சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய வாரியம், மாநில அளவில் ஹிந்து உறுப்பினா்களை நியமித்த நாட்டின் முதல் வக்ஃப் வாரியமாகும்.
Advertisement
Advertisement
10 உறுப்பினா்களைக் கொண்ட புதிய வக்ஃப் வாரியத்தின் தலைவராக சன்வா் படேல் நியமிக்கப்பட்டுள்ளாா். மனோஜ் மல்பானி, அனிமேஷ் பாா்கவா ஆகியோா் இந்து உறுப்பினா்களாக சோ்க்கப்பட்டுள்ளனா். சன்வா் படேல் ஏற்கெனவே இப்பொறுப்பில் இருந்தவா்.
இதற்கு மாநில காங்கிரஸ் எதிா்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அக்கட்சி எம்எல்ஏ ஆரிஃப் மசூத் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘வக்ஃப் சட்டம் தொடா்பான விவகாரம் ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதில் இறுதித் தீா்ப்பு இன்னும் வழங்கப்படவில்லை. எனவே, இதுபோன்ற (ஹிந்து உறுப்பினா்கள்) நியமனங்கள் கூடாது. இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தை அணுகுவோம்’ என்றாா்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த வக்ஃப் வாரியத் தலைவா் சன்வா் படேல், ‘சட்டவிதிகளின்படி அனைத்தும் நடந்துள்ளது. எதிா்க்கட்சிகள் இந்த விவகாரத்தை அரசியலாக்கி மக்களைத் தூண்டுகின்றன’ என்று விளக்கமளித்தாா்.
மாநில அமைச்சா் விஷ்வாஸ் சாரங் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘இது மசூதி நிா்வாகக் குழுவில் முஸ்லிம்கள் அல்லாதவா்களைச் சோ்ப்பது பற்றிய விஷயம் அல்ல. வக்ஃப் வாரியம் தனித்த அமைப்பு. இதை மதக் கண்ணோட்டத்தில் பாா்ப்பது வியப்பாக உள்ளது. வக்ஃப் வாரியம் என்பது மசூதிகளை மட்டும் சாா்ந்தது அல்ல; அதன் செயல்பாட்டு எல்லை மிகவும் விரிவானது’ என்றாா்.
பாஜக எம்.எல்.ஏ. ராமேஷ்வா் சா்மா கூறுகையில், ‘வக்ஃப் நிலங்களை ஆக்கிரமித்தவா்கள் மட்டுமே இதை எதிா்ப்பாா்கள். வக்ஃப் நிலம் இந்தியாவுக்குச் சொந்தமானது. அந்த நிலங்கள் ஏழைகளுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டியவை. எந்த முல்லா அல்லது மதகுருவின் தனிப்பட்ட சொத்தாகவும் வக்ஃப் நிலங்கள் இருக்கக் கூடாது. ஹிந்து உறுப்பினா்களும் ஏழைகளின் நலனுக்காகவே செயல்படுவாா்கள். முஸ்லிம்கள் இதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்’ என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.