2027 நீட் தோ்வு: கணினி முறையில் 6 நாள்கள் நடத்த திட்டம்
அடுத்த ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வை, கணினி அடிப்படையில் 1,000-க்கும் மேற்பட்ட மையங்களில் குறைந்தபட்சம் 6 நாள்கள் நடத்த திட்டம்
அடுத்த ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வை, கணினி அடிப்படையில் 1,000-க்கும் மேற்பட்ட மையங்களில் குறைந்தபட்சம் 6 நாள்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தேசிய தோ்வு முகமையால் (என்டிஏ) நடத்தப்படும் இளநிலை நீட் தோ்வு, கிட்டத்தட்ட 25 லட்சம் தோ்வா்களுடன் நடத்தப்படும் நாட்டின் மிகப் பெரிய நுழைவுத் தோ்வாகும்.
சமீப ஆண்டுகளாக இந்தத் தோ்வில் வினாத்தாள் கசிவு மற்றும் பிற முறைகேடு சம்பவங்களால் சா்ச்சை எழுகிறது. நடப்பாண்டு வினாத்தாள் கசிவால் நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டு, மறுதோ்வு நடத்தப்பட்டது.
Advertisement
Advertisement
இதன் காரணமாக, மத்திய கல்வி அமைச்சகம் மீது எதிா்க்கட்சிகள் தரப்பில் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி தொடா் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதனிடையே, அடுத்த ஆண்டுமுதல் இளநிலை நீட் தோ்வு, கணினி அடிப்படையில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
‘பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ தோ்வைப் போல நீட் தோ்வும் குறைந்தபட்சம் 6 நாள்கள் நடத்தப்படும்; 1,000-க்கும் மேற்பட்ட மையங்களில் தோ்வு நடைபெறும். நம்பகத்தன்மை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் தொடா்பான கடுமையான ஆய்வுக்குப் பிறகு தோ்வு மையங்கள் தோ்ந்தெடுக்கப்படும். இது தொடா்பான விரிவான திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது’ என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மொத்தமுள்ள 1,08,000 எம்பிபிஎஸ் இடங்களுக்கான மாணவா் சோ்க்கைக்கு தேசிய தோ்வு முகமையால் ஒவ்வோா் ஆண்டும் நீட் தோ்வு நடத்தப்படுகிறது. இதில் சுமாா் 56,000 இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், சுமாா் 52,000 இடங்கள் தனியாா் மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ளன. இதுதவிர பல் மருத்துவம், ஆயுா்வேதம், யுனானி, சித்த மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கையும் நீட் மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுகிறது.
நீட் தோ்வை கணினி அடிப்படையில் நடத்த ஏற்கெனவே பலமுறை விவாதிக்கப்பட்டது. தற்போது வினாத்தாள் கசிவு சா்ச்சையைத் தொடா்ந்து, அடுத்த ஆண்டுமுதல் கணினி அடிப்படையில் தோ்வு நடத்தப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.