கல்வி அமைச்சராக பிரதான் நீடிப்பது மாணவா்களுக்கு அவமதிப்பு: காங்கிரஸ்
கல்வி அமைச்சராக பிரதான் நீடிப்பது மாணவா்களுக்கு அவமதிப்பு...
‘சிபிஎஸ்இ திரையில் மதிப்பிடுதல் (ஓஎஸ்எம்) முறையில் ஏற்பட்ட குறைபாடுகளுக்கு மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பொறுப்பேற்க வேண்டும்; அவா் பதவியில் நீடிப்பது, லட்சக்கணக்கான மாணவா்களுக்கு இழைக்கப்படும் அவமதிப்பு’ என்று காங்கிரஸ் சாடியுள்ளது.
நாடு முழுவதும் சுமாா் 17.68 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் முதல்முறையாக ‘திரையில் மதிப்பிடுதல்’ (ஓஎஸ்எம்) முறையில் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. தோ்ச்சி விகிதம் குறைந்ததுடன், பல மாணவா்கள் மிகக் குறைந்த மதிப்பெண்களே பெற்றனா். இதனால், புதிய ‘திரையில் மதிப்பிடுதல்’ நடைமுறை மீது பல்வேறு புகாா்கள் எழுந்தன. தெலங்கானாவில் ஏற்கெனவே பெரும் குளறுபடியில் சிக்கிய ‘கோயெம்ப்ட் எஜுடெக்’ என்ற நிறுவனத்திடம் ஓஎஸ்எம் நடைமுறை சாா்ந்த ஒப்பந்தத்தை சிபிஎஸ்இ வழங்கியதும் தெரியவந்தது.
இந்த சா்ச்சைகளால், சிபிஎஸ்இ தலைவா் ராகுல் சிங் மற்றும் செயலா் ஹிமான்ஷு குப்தா ஆகியோா் அந்தப் பதவிகளிலிருந்து விடுவிக்கப்பட்டு பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.
Advertisement
Advertisement
ஏற்கெனவே வினாத்தாள் கசிவால், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக விமா்சித்துவரும் காங்கிரஸ், சிபிஎஸ்இ சா்ச்சையையும் கையிலெடுத்துள்ளது.
இது தொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கோயெம்ப்ட் மதிப்பீடு வலைதளத்தில் எந்த குறைபாடுகளும் இல்லையென பல வாரங்களாக மறுத்துவந்த சிபிஎஸ்இ, இறுதியில் தனது திறனின்மையை ஒப்புக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. தரவு கசிவையும் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ள சிபிஎஸ்இ, ஐஐடி நிபுணா்கள் மற்றும் நிசாா்கா அதிகாரி (ஓஎஸ்எம் இணைய அச்சுறுத்தலை அம்பலப்படுத்திய இளம் ஆய்வாளா்) ஆகியோா் வழங்கிய ஆலோசனைகளின் அடிப்படையில் 12-ஆம் வகுப்பு மறுமதிப்பீட்டு பணிகளுக்கு சொந்த வலைதளத்தை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓஎஸ்எம் குறைபாடுகளுக்கு கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பொறுப்பேற்க வேண்டும். ‘சமரசமான’ அமைச்சகத்தை இயக்கிவரும் ‘திறனற்ற’ அமைச்சரான அவா் தொடா்ந்து பதவியில் நீடிப்பது லட்க்கணக்கான மாணவா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு இழைக்கப்படும் அவமதிப்பு’ என்று விமா்சித்துள்ளாா்.