சிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!
சிபிஎஸ்இ தேர்வு குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளதைப் பற்றி...
சிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, மதிப்பெண் சரிபார்ப்பு மற்றும் விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு சிபிஎஸ்இ வலைதளத்தை பயன்படுத்துவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டதாக மாணவர்களும், பெற்றோர்களும் புகார் தெரிவித்திருந்தனர்.
விடைத்தாள்கள் மங்கலாக இருந்ததாகவும், தங்களுடைய விடைத்தாள்கள் மாற்றப்பட்டிருந்ததாகவும் என பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், திருத்தப்பட்டு மதிப்பெண் வழங்கப்பட்ட விடைத்தாள்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பெறுவதற்கு விண்ணப்பித்த சில மாணவா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும், சில மாணவர்களுக்கு குறைந்த கட்டணம் விதிக்கப்பட்டதாகவும் பல்வேறு குளறுபடிகளால் எழுந்த நிலையில், அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டவர்களுக்கு அதனை திரும்ப வழங்கும் பணிகள் தொடங்கின.
Advertisement
Advertisement
ஏற்கனவே நீட் தேர்வு ரத்தால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள மத்திய கல்வி அமைச்சகம், சிபிஎஸ்இ இணையதளம் மற்றும் போதுமான பயிற்சி இன்றி ஒஎஸ்எம் முறையில் விடைத்தாள்களை திருத்தி, பல மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்திருப்பதாகக் குற்றம்சாட்டின. உச்சநீதிமன்ற நீதிபதிக்கு எதிராக குரல் கொடுத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்த நிலையில், சி.பி.எஸ்.இ. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து மௌனம் கலைத்துள்ள அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்தக் குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகையில், “நான் பொறுப்பேற்கிறேன். அது சரி செய்யப்படும், ஒரு தீர்வு காணப்படும். நாங்கள் அனைவரும் அந்தப் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
தேர்வு எழுதிய 17 லட்சம் மாணவர்களில், 98 லட்சம் விடைத்தாள்களின் பிரதிகள் எங்களிடம் இருக்கின்றன. அவற்றில் ஒவ்வொன்றும் 40 பக்கங்கள் கொண்டுள்ளன.
ஏதேனும் முறைகேடுகள் கண்டறியப்பட்டால், யாரும் தப்பிக்க முடியாது என்று நான் அனைவருக்கும் உறுதியளிக்கிறேன். இப்போதைக்கு அரசியல் செய்ய வேண்டியதில்லை. முதலில் தேர்வர்களுக்கு மன அழுத்தம் மேலும் அதிகரிக்கக் கூடாது என்பதுதான் மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.எஸ்.இ. தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ராகுல் காந்தியைப் பொறுத்தவரை, அவர் வேறு ஒரு மனநிலைக்கு சென்றுவிட்டதாகத் தோன்றுகிறது” என்றார்.