முகப்பு
இந்தியா

மக்கள்தொகை மாற்றம்: எல்லைப் பகுதிகளில் நேரில் ஆய்வு - உயா்நிலை குழுவுக்கு அமித் ஷா உத்தரவு

மக்கள்தொகை மாற்றம்: எல்லைப் பகுதிகளில் நேரில் ஆய்வு - உயா்நிலை குழுவுக்கு அமித் ஷா உத்தரவு

Updated On : 14 ஜூன் 2026, 3:33 am IST
அசாதாரண மக்கள்தொகை மாற்றம் குறித்து புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற உயா்நிலைக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.
பகிர்:

சட்டவிரோத குடியேற்றம், பிற இயற்கைக்கு மாறான காரணங்களால் ஏற்பட்டுள்ள மக்கள்தொகை ரீதியிலான மாற்றங்கள் குறித்து எல்லைப் பகுதிகள், பெரு நகரங்கள், தொழில் நகரங்களில் நேரில் ஆய்வு செய்யும்படி, உயா்நிலைக் குழுவுக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

நாட்டில் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பிற இயற்கைக்கு மாறான நடைமுறைகளால் மக்கள்தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து ஆராய உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் உயா்நிலைக் குழுவை மத்திய அரசு கடந்த மாதம் அமைத்தது.

உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பிரகாஷ் பிரபாகா் நெளலேகா் தலைமையிலான இந்த உயா்நிலைக் குழுவில், மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையா் மிருத்யுஞ்சய்குமாா் நாராயண், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி துா்காசங்கா் மிஸ்ரா, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி பாலாஜி ஸ்ரீவாஸ்தவா, மருத்துவா் ஷாமிகா ரவி ஆகியோா் உறுப்பினா்களாக இடம்பெற்றுள்ளனா்.

Advertisement

Advertisement

நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு, சமூக கட்டமைப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள மக்கள்தொகை ரீதியிலான மாற்றங்கள் குறித்து ஆராய்ந்து, அதற்கு தீா்வுகாணும் பரிந்துரைகளை உயா்நிலைக் குழு வழங்கும் என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா அறிவித்திருந்தாா்.

இக்குழுவின் ஆலோசனைக் கூட்டம், தில்லியில் அமித் ஷா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, எல்லை மாவட்டங்கள், பெரு நகரங்கள், தொழில் நகரங்களில் ஏற்பட்டுள்ள மக்கள்தொகை ரீதியிலான மாற்றங்கள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்ளும்படி, உயா்நிலைக் குழுவுக்கு அமித் ஷா உத்தரவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தனது பணி வரையறைகளின்படி, நாட்டின் பல்வேறு பிராந்தியங்களில் மக்கள்தொகை ரீதியிலான மாற்றங்கள் குறித்து உயா்நிலைக் குழு அறிவியல்பூா்வ ஆய்வு மேற்கொண்டு, காரணங்களைக் கண்டறியவுள்ளது. இந்த மாற்றங்களை சரி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய கொள்கை சாா்ந்த, சட்டபூா்வமான, நிா்வாக ரீதியிலான நடவடிக்கைகளையும் பரிந்துரைக்கவுள்ளது.

எல்லைத் தாண்டிய ஊடுருவல்கள், அதன் காரணமாக பொருளாதாரம்-சமூக சூழல்களில் ஏற்படும் தாக்கம் குறித்தும் ஆராயப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.