அம்புபாச்சி மேளா: மூன்று நாள்களுக்கு காமாக்யா கோயில் நடை மூடப்படும்!
காமாக்யா தேவி கோயிலில் நடைபெறும் அம்புபாச்சி மேளா பற்றி..
அஸ்ஸாமின் குவாஹாட்டியில் உள்ள புகழ்பெற்ற காமாக்யா தேவி கோயிலில் அம்புபாச்சி மேளா திங்கள்கிழமை இரவு தொடங்குகிறது. இதையடுத்து அடுத்த மூன்று நாள்களுக்கு ஜூன் 25 வரை கோயில் நடை அடைக்கப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
51 சக்தி பீடங்களில் ஒன்றாக திகழ்கிறது ஸ்ரீ காமக்யா தேவி திருக்கோயில். அன்னையின் உடற்கூறுகளில் தலைப்பாகம் விழுந்த இடமாகக் கருதப்படுகிறது. அம்மனின் சக்தி பீடங்களில் இது காமகிரி பீடம் என்றழைக்கப்படுகிறது.
இத்திருத்தலத்தில் அம்புபாச்சி மேளா காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு சடங்காகும். அதாவது, காமாக்யா தேவியின் மாதவிடாய் சுழற்சி காலத்தைக் குறிப்பிடப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை அம்மன் மாதவிடாய் சுழற்சி காலத்தைக் கடக்கிற மூன்று நாள்களும் கோயிலின் நடை அடைக்கப்படுவது வழக்கம். அம்மனின் மாதவிடாய் சுழற்சி காலம் நிறைவடைந்த பிறகு கோயிலில் சிறப்புப் பூஜைகள், தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்ற பின்னர், பக்தர்களின் தரிசனத்துக்காகக் கோயில் நடை திறக்கப்படும்.
Advertisement
Advertisement
அம்புபாச்சி மேளாவிற்குப் பின்னர், காமாக்யா தேவியின் தரிசனத்தைக் காண உள்ளூர் மட்டுமல்லாது, வெளியூரில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர்.
அதன்படி, கமாக்யா தேவி கோயில் ஜூன் 22 இரவு 9.08 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும். அதன்பிறகு ஜூன் 26 அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டுச் சுத்தப்படுத்தும் பணி நிறைவடைந்த பின்னர், சம்பிரதாய பூஜைக்குப் பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
ஜூன் 23, 24, 25 ஆகிய தேதிகளில் மூன்று பகல், மூன்று இரவுகள் தொடர்ந்து 'மஹா யக்ஞம்' நடைபெற உள்ளது.
அம்புபாச்சி மேளாவின்போது சக்தி பீடத்திற்கு சுமார் எட்டு லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என காம்ரூப் பெருநகர மாவட்ட நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
2024-ல், வெளிநாட்டிலிருந்து 20 பேர் உள்பட மொத்தம் 7,46,066 பக்தர்கள் அம்புபாச்சி மேளாவிற்கு வருகை தந்தனர், அதே சமயம் கடந்தாண்டு 42 வெளிநாட்டினர் உள்பட 7,72,019 பேர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
இதுதொடர்பாக அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறுகையில்,
நீலாச்சல மலையில் வீற்றிருக்கும் அன்னை காமாக்யாவின் புனிதமான அம்புபாச்சி மஹா யோக நன்னாளில், அகிலத்தின் அன்னையின் பாதங்களில் கோடிக்கணக்கான வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்.
அம்புபாச்சி மேளாவை முன்னிட்டு பக்தர்களை நான் வரவேற்கிறேன். இந்த மேளாவில் இந்தாண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்னை காமாக்யாவின் அருள்பார்வை அனைவரின் வாழ்வையும் மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு மற்றும் ஆன்மிக வலிமையால் நிரப்பட்டும் என்பதே எனது பிரார்த்தனை.
"ஜெய் மா காமாக்யா," என்று அவர் கூறினார்.
இந்த மாபெரும் ஆன்மிக கழ்வு சுமுகமாகவும், பாதுகாப்பாகவும், ஒழுங்காகவும் நடைபெறுவதை உறுதிசெய்ய ஒன்றிணையுமாறு அனைத்துத் தரப்பினரையும், பக்தர்களையும் அவர் கேட்டுக்கொண்டார்.
அம்புபாச்சி திருவிழாவில் பங்கேற்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்குத் தங்கும் இட வசதி அளிக்க மூன்று பிரம்மாண்டமான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
விஐபி பாஸ் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பிரதான கோயிலுக்குச் செல்லும் சாலையில் அவசர பயன்பாட்டு வாகனங்களைத் தவிர அனைத்து வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது
மேலும், குறிப்பிட்ட இடங்களில் கழிப்பறைகள், தெரு விளக்குகள், சுகாதார முகாம்கள் மற்றும் சாலைகளில் தடுப்புகள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Famed Ambubachi Mela at Kamakhya temple here will begin from Monday night with the administration gearing up to welcome lakhs of devotees in the next four days.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.