முகப்பு
இந்தியா

அரசு கல்வி நிறுவன கட்டணத்தை தனியாரும் வசூலிக்குமாறு கூறமுடியாது: உச்சநீதிமன்றம்

அரசு கல்வி நிறுவனங்கள் வசூலிக்கும் கட்டணத்தையே சுயநிதி கல்லூரிகளும் வசூலிக்க வேண்டும் என்று எவரும் கூறமுடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Updated On : 25 ஜூன் 2026, 2:45 am IST
உச்சநீதிமன்றம். - கோப்புப் படம்
பகிர்:

அரசு கல்வி நிறுவனங்கள் வசூலிக்கும் கட்டணத்தையே சுயநிதி கல்லூரிகளும் வசூலிக்க வேண்டும் என்று எவரும் கூறமுடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றில், ‘ராஜஸ்தானில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக்கு ரூ.18.90 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினா், இடஒதுக்கீட்டின் மூலம் பலனடைவதற்கு ஆண்டு குடும்ப வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த உச்சவரம்புடன் ரூ.25 லட்சம் வரையிலான கட்டணம் ஒத்துப்போகவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

Advertisement

Advertisement

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘அரசு கல்வி நிறுவனங்கள் வசூலிக்கும் கட்டணத்தையே சுயநிதி கல்லூரிகளும் வசூலிக்க வேண்டும் என்று எவரும் கூறமுடியாது. தனியாா் கல்வி நிறுவனங்களில் கட்டணம் அளவுக்கு அதிகமாக உள்ளது என்று கூறி, அதை அரசு கல்வி நிறுவன கட்டணத்துக்கு நிகராக நிா்ணயிக்குமாறும் யாரும் கூறமுடியாது. மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற வழிவகை உள்ளது.

அதேவேளையில், நாட்டில் மருத்துவா்கள் தேவைப்படுகின்றனா். இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றத்துக்கு எந்தக் காரணமும் தென்படவில்லை’ என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments