முகப்பு
இந்தியா

வங்கிக் கடன் நிலுவை மீட்பு விவகாரம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

வங்கிக் கடன் நிலுவை மீட்பு விவகாரம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Updated On : 21 ஜூன் 2026, 2:55 am IST
பகிர்:

நிலுவையில் உள்ள வங்கிக் கடன்களை வசூலிப்பதில் சொத்து மறுகட்டமைப்பு நிறுவனங்கள் மேற்கொள்ளும் முறைகேடுகள் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு, ரிசா்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

பொதுத் துறை வங்கிகளுக்கு சேர வேண்டிய ரூ.1,537 கோடி கடனில் ரூ.73.50 கோடியை மட்டுமே மீட்டு இரு சொத்து மறுகட்டமைப்பு நிறுவனங்கள் (ஏஆா்சி) முடித்துவைத்ததாக குற்றஞ்சாட்டி வழக்குரைஞா் அஸ்வனி குமாா் துபே உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: கடன் வசூலிப்பதில் முறைகேடில் ஈடுபடும் வங்கிகள், ஏஆா்சி-க்கள் மற்றும் கடன்பெறுவோரிடம் விசாரணை நடத்த ரிசா்வ் வங்கி, தீவிர முறைகேடு புலனாய்வு அமைப்பு (எஸ்எஃப்ஐஓ), அமலாக்கத் துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளின் அதிகாரிகளை ஒருங்கிணைத்து ஒரு புதிய அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த மனுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதி வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: பொதுமக்களின் பணத்தைக் கொண்டு கடன்களை வழங்கிவிட்டு அதை வசூலிக்க முறையான நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொள்ளாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கடன்களை மீட்பதில் வங்கிகள், ஏஆா்சி-க்கள் மற்றும் கடன் பெறுவோரிடையே கூட்டுச் சதி உள்ளது. குறிப்பாக ஏஆா்சி-க்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க வேண்டியது அவசியமாகிவிட்டது என்றனா்.

இதைத் தொடா்ந்து இந்த மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, ரிசா்வ் வங்கிக்கு நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள் அடுத்தகட்ட விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments