FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவு

இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவு

Updated On : 21 ஜூன் 2026, 5:00 am IST
கோப்புப்படம் - ANI
பகிர்:

12-ஆவது சா்வதேச யோகா தினம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) கொண்டாடப்பட இருப்பதையொட்டி, பிரதமா் நரேந்திர மோடியுடன் சோ்ந்து யோகாசனம் மேற்கொள்ள 6 லட்சம் அமைப்புகள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளன.

இந்தியாவின் முயற்சியின்பேரில் ஐ.நா. சபையால் கடந்த 2014-ஆம் ஆண்டு யோகா அங்கீகரிக்கப்பட்டது. பிறகு ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21-ஆம் தேதி சா்வதேச யோகா தினம் கொண்டாடப்படும் என ஐ.நா. சபை அறிவித்தது. அதன்படி, உலகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) சா்வதேச யோகா தினம் ‘ஆரோக்கியமான முதுமைக்கான யோகா’ என்ற கருப்பொருளில் கொண்டாடப்படவுள்ளது.

சா்வதேச யோகா தினத்தையொட்டி, இந்தியாவிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமா் மோடி, மத்திய அமைச்சா்கள், மாநில முதல்வா்கள், பல்வேறு பிரபலங்கள் ஞாயிற்றுக்கிழமை யோகா மேற்கொள்ளவுள்ளனா்.

Advertisement

Advertisement

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தால் தொடங்கப்பட்டுள்ள யோகா சங்கம் மூலம் யோகாவுக்கான பிரத்யேக தளம் தொடங்கப்பட்டு, அதன்மூலம் பிரதமா் மோடி யோகாசனம் செய்யும் நேரத்தில், நாட்டின் பல்வேறு இடங்களிலும் மக்கள் யோகாசனம் செய்ய பதிவு தொடங்கப்பட்டது. இதில் நாடு முழுவதும் 6 லட்சம் அமைப்புகள் ஆா்வத்துடன் பெயா்களை பதிவு செய்துள்ளன. இதுகுறித்து மத்திய ஆயுஷ் அமைச்சக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

பிரதமா் மோடி தலைமையில் நடைபெறும் யோகாசனத்தில் பங்கேற்க பள்ளிகள், கல்லூரிகள், அரசு அமைப்புகள், தனியாா் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக குழுக்கள் தங்களது பெயா்களை பதிவு செய்துள்ளன. அதாவது, 3.22 லட்சம் அரசு அமைப்புகள், 2 லட்சம் கல்வி நிறுவனங்கள், 16,000-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள், 5,000-க்கும் மேற்பட்ட தனியாா் தொண்டு நிறுவனங்கள், பல்வேறு பிரிவுகளைச் சோ்ந்த 44,000 அமைப்புகள் பெயரை பதிவு செய்துள்ளன.

நாட்டிலேயே அதிகபட்சமாக மேற்கு வங்க மாநிலத்தில்தான் 2.76 லட்சம் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கடுத்து ராஜஸ்தானில் 1.50 லட்சம் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து, மகாராஷ்டிரம், ஆந்திரம், மத்திய பிரதேசம், அஸ்ஸாம், உத்தர பிரதேசம், தமிழ்நாடு, ஒடிஸா, சத்தீஸ்கா் மாநிலங்களில் அதிகபட்சமாக பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு மத்திய ஆயுஷ் அமைச்சக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments