வருத்தம் தெரிவித்த ராகுல்! சிவராஜ் சிங் மகன் தொடர்ந்த அவதூறு வழக்கு தள்ளுபடி!
ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கை ம.பி. உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது பற்றி...
மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளகான் மகனுக்கு எதிராக தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்ததை தொடர்ந்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கை ம.பி. உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மத்திய பிரதேச மாநிலம், ஜபுவாவில், கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டம் ஒன்றில், பனாமா ஆவணங்கள் கசிவு விவகாரத்துடன் சிவராஜ் சிங் செளகான் மகன் கார்த்திகேய சிங்கின் பெயரைத் தொடர்புபடுத்து ராகுல் காந்தி பேசியிருந்தார்.
இதையடுத்து, ராகுல் காந்தியின் கருத்து தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாக கார்த்திகேய சிங் சார்பில் போபால் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தவறுதலாக பெயரைக் குறிப்பிட்டதாக ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை ம.பி. உயர்நீதிமன்றம் ஜபல்பூர் அமர்வில் எழுத்துப்பூர்வமாக ராகுல் காந்தி தாக்கல் செய்த கடிதத்தில், பனாமா ஆவணங்கள் கசிவு விவகாரம் குறித்துப் பேசும்போது புகார்தாரரின் பெயரைத் தவறுதலாகக் குறிப்பிட்டுவிட்டதாகவும், அதற்காக அடுத்த நாளே பகிரங்கமாக வருத்தம் தெரிவித்ததாகவும் காந்தி குறிப்பிட்டார்.
மேலும், சத்தீஸ்கரின் முன்னாள் முதலமைச்சர் ஒருவரின் மகனையே குறிப்பிடத் தான் எண்ணியிருந்ததாக அவர் தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் வருத்தத்தை ஏற்றுக்கொண்ட கார்த்திகேய சிங், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கான போபால் சிறப்பு நீதிமன்றத்தில் ராகுலுக்கு எதிராகத் தான் தொடர்ந்திருந்த வழக்கை திரும்பப் பெற ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கை ம.பி. உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.
Rahul expressed regret! Defamation case filed by Shivraj Singh's son dismissed!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.