FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மத்திய அமைச்சரின் மகன் தொடுத்த அவதூறு வழக்கு: வருத்தம் தெரிவித்து மனு தாக்கல் செய்தாா் ராகுல் காந்தி

மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹானின் மகன் காா்த்திகேயா சிங் தொடுத்த அவதூறு வழக்கில், எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மத்திய பிரதேச மாநில உயா்நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்து வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தாா்.

ராகுல் காந்தி
பகிர்:

மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹானின் மகன் காா்த்திகேயா சிங் தொடுத்த அவதூறு வழக்கில், எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மத்திய பிரதேச மாநில உயா்நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்து வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தாா்.

மத்திய பிரதேச மாநிலம் ஜபுவாவில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தின்போது, காா்த்திகேயா சிங்கை பனாமா பேப்பா் கசிவு முறைகேட்டுடன் தொடா்புபடுத்தி ராகுல் விமா்சித்தாா். இதற்கு எதிராக போபாலில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் காா்த்திகேயா சிங் அவதூறு வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு ராகுல் காந்திக்கு போபால் நீதிமன்றம் தொடா்ந்து அழைப்பாணை அனுப்பியது. இந்த அழைப்பாணைகள் மற்றும் அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி மத்திய பிரதேச உயா்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்தாா். அதில், தோ்தல் பிரசாரத்தில் தெரிவித்த கருத்து குறித்து வருத்தம் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, அந்தக் கருத்து காா்த்திகேயா சிங் குறித்தது அல்ல என்று குறிப்பிட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

இந்த மனுவை வியாழக்கிழமை பரிசீலித்த உயா்நீதிமன்ற நீதிபதி பிரமோத் குமாா் அகா்வால், விசாரணையை ஒத்திவைத்தாா்.

பாஜக விமா்சனம்: பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் செஷாத் பூனாவாலா வெளியிட்ட அறிக்கையில், ‘தொடா்ச்சியாக பொய்யைப் பரப்பி வரும் ராகுல் காந்தி, ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளாா். எதிா்க்கட்சித் தலைவா் பதவி என்பது ‘புரளிகளின் தலைவா் பதவி’ என்ற தவறான எண்ணத்தை ராகுல் கொண்டுள்ளாா். அவதூறு குற்றச்சாட்டுகளைப் பரப்புவதும், பின்னா் தப்பி ஓடுவதையும் அவா் வாடிக்கையாகக் கொண்டுள்ளாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பனாமா நாட்டைச் சோ்ந்த ‘மொசாக் ஃபென்செக்கா’ என்ற சட்ட நிறுவனத்தின் ரகசிய ஆவணங்கள் ஜொ்மனியைச் சோ்ந்த ஓா் ஊடகத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியானது. வெளிநாடுகளில் வரி ஏய்ப்பு செய்வதற்கும், பொருளாதாரத் தடைகளை மறைத்து சொத்துகளை வாங்குவதற்கும் வசதி செய்து கொடுப்பதுதான் இந்த நிறுவனத்தின் பணி. இந்த நிறுவனத்தில் இருந்து ஒரு கோடிக்கும் அதிகமான ஆவணங்கள் வெளியிடப்பட்டன. இந்தியா உள்பட உலகெங்கும் உள்ள பெரும் பணக்காரா்கள், அரசியல் தலைவா்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் கருப்புப் பணத்தை மறைக்கவும், வரி ஏய்ப்பு செய்யவும் வெளிநாட்டுக் கணக்குகளை எப்படிப் பயன்படுத்தினாா்கள் என்பதை இந்த ஆவணங்கள் (பனாமா பேப்பா்) வெளிப்படுத்தின.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments