பாலியல் சீண்டல்: பெண்கள் கிரிக்கெட் அணி பயிற்சியாளர், மேலாளருக்கு வாழ்நாள் தடை!
மேகாலய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர், மேலாளர் ஆகியோருக்கு பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு காரணமாக வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேகாலய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர், மேலாளர் ஆகியோருக்கு பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு காரணமாக வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
23-வயதுக்குள்பட்ட பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹேமந்த ராய் மற்றும் முன்னாள் துணை மேலாளர் ஆகியோருக்கு பாலியல் சீண்டல் புகார் காரணமாக வாழ்நாள் தடை விதித்து மேகாலயா கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
திரிபுராவின் அகர்த்தலாவில் அந்த அணி கடந்த ஆண்டு பங்கேற்றபோது விளையாட்டு வீராங்கனைகளிடம் இருவரும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மேகாலயா மாநில மகளிர் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கடந்தாண்டு டிசம்பரில் இருமுறை புகார் அளிக்கப்பட்ட நிலையில், அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறிய மேகாலயா கிரிக்கெட் சங்க கௌரவச் செயலாளர் ராயோனால்ட் கார்கம்னியை மறு உத்தரவு வரும் வரை இடைநீக்கம் செய்துள்ளது.
பின்னர், பதிவான புகார் மீது நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டது.
புகார்களை விசாரிக்காமல் கிரிக்கெட் வீரர்களைப் பாதுகாக்கத் தவறியதற்காக
கிரிக்கெட் சங்கத்தை மகளிர் ஆணையம் கடுமையாகச் சாடியது. பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களை விசாரிக்க தனியே உள் விசாரணைக் குழு அந்த அமைப்பிடம் இல்லை.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக மேகாலய கிரிக்கெட் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், ”தங்களின் மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் ஒரு தலைமைப் பயிற்சியாளர் மீது வைக்கும் நம்பிக்கை என்பது விளையாட்டுத் துறையில் மிகவும் புனிதமான உறவுகளில் ஒன்றாகும். நீங்கள் அந்த நம்பிக்கையை மிக மோசமாக மீறிவிட்டீர்கள்.
உங்களின் நடத்தை கிரிக்கெட் சங்கத்தின் தொழில்முறை கடமைகளை மீறியது மட்டுமின்றி, உங்கள் பொறுப்பில் இருந்த பெண் வீராங்கனைகளின் கண்ணியம், பாதுகாப்பு போன்றவற்றையும் மீறியுள்ளது.
இதுபோன்ற குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட எவரும் இந்த அமைப்புடன் எவ்வகையிலும் தொடர்ந்து இணைந்திருப்பதை கிரிக்கெட் சங்கம் அனுமதிக்காது” எனக் குறிப்பிட்டுள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர் ஜேம்ஸ் பிகே சங்மா கடந்த மார்ச் மாதம் மேகாலயா கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகப் பதவியேற்றார். அவரிடம் இந்த விவகாரம் தொடர்பான புகார்கள் மறைக்கப்பட்டதாகத் தெரிவித்த சங்மா, இந்த வழக்கில் மேற்கொள்ளப்படும் அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைகளுக்கு சங்கம் ஒத்துழைக்கும் என்று உறுதியளித்தார்.
The head coach and manager of the Meghalaya women's cricket team have been handed a lifetime ban due to allegations of sexual harassment.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.