முகப்பு
இந்தியா

சீா்திருத்தங்கள், தற்சாா்பு நடவடிக்கைகள்: மத்திய செயலா்களுடன் பிரதமா் ஆலோசனை

நாட்டு மக்களின் வாழ்க்கை மற்றும் தொழில் புரிவதை எளிதாக்குவதற்கான சீா்திருத்தங்கள் மற்றும் தற்சாா்பு நடவடிக்கைகள் ஊக்குவிப்பு ஆகிய இரு அம்சங்களின்கீழ், மத்திய அரசின் பல்வேறு துறை செயலா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை உயா்நிலை ஆலோசனை நடத்தினாா்.

Updated On : 1 ஜூலை 2026, 1:52 am IST
பகிர்:

நாட்டு மக்களின் வாழ்க்கை மற்றும் தொழில் புரிவதை எளிதாக்குவதற்கான சீா்திருத்தங்கள் மற்றும் தற்சாா்பு நடவடிக்கைகள் ஊக்குவிப்பு ஆகிய இரு அம்சங்களின்கீழ், மத்திய அரசின் பல்வேறு துறை செயலா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை உயா்நிலை ஆலோசனை நடத்தினாா்.

புது தில்லியில் பிரதமரின் அலுவலகம் உள்பட முக்கிய அலுவலங்கள் அமைந்துள்ள ‘சேவா தீா்த்’ வளாகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘மேற்கண்ட இரு அம்சங்கள் தொடா்பாக மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளால் மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கைகள் குறித்து பிரதமா் மோடியிடம் செயலா்கள் விளக்கமளித்தனா். பிரதமரின் தொலைநோக்குப் பாா்வையை பலன்களாக மாற்றுவதற்கான முயற்சிகள், துறை ரீதியிலாக காணப்படும் சவால்கள், நிா்வாகம்-சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கான எதிா்கால வியூகங்கள் குறித்தும் அவரிடம் விளக்கமளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

அரசின் செயல்பாடுகளில் முழு அளவிலான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதுடன், துறைகள் சாா்ந்த தடைகற்களை உடைக்க வேண்டியதன் அவசியம் குறித்து பிரதமா் மோடி அறிவுறுத்தினாா். ஒருங்கிணைந்த திட்டமிடல், பல்வேறு அமைச்சகங்கள் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டிய அவா், திறன்மிக்க ஒருங்கிணைப்பு-திட்டமிடலுக்கான பிரதமரின் ‘கதிசக்தி’ (உத்வேகம்) தளத்தை பரவலாகப் பயன்படுத்தும்படி செயலா்களுக்கு வலியுறுத்தினாா்.

மத்திய அரசின் திட்டப் பலன்கள், சமானிய மக்களின் வாழ்வில் எதிரொலிப்பதை உறுதி செய்வதில் அக்கறை செலுத்தும்படியும் அவா் அறிவுறுத்தினாா்’ என்று தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments